இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் 2020ல் சிறப்பான வர்த்தகத்தை அடைந்த நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் இரு சக்கர வாகன தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 10 கோடி வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 வருடத்தில் இந்நிறுவன வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 50 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
2020 வாகன விற்பனை
2020ஆம் ஆண்டில் இந்திய விவசாய துறையில் ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி நாட்டில் வாகன விற்பனையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றது. குறிப்பாக இந்தியாவின் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் கார் மற்றும் பைக் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்த காரணத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறது.
ஹீரோ மோட்டோ கார்ப்
பட்ஜெட் வாகன பிரிவில் ஹீரோ மோட்டோ கார்ப் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் இந்நிறுவனத்தின் ப்ரீமியம் வாகன விற்பனையை மேம்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
பவன் முஞ்சால்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவரான பவன் முஞ்சால் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் அடுத்த 5 வருடத்தில் 50 புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதுமட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் ப்ரீமியம் வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக இலக்காக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக விரிவாக்கம்
இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் தனது வர்த்தகத்தை லத்தின், மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பிற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து இந்தியாவில் இருந்து அதிகளவிலான வாகனங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
கூட்டணி முறிவு..
2011ஆம் ஆண்டில் ஹீரோ நிறுவனம் ஹோண்டா நிறுவன கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த நிலையில் பல புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் செய்துள்ளது. குறிப்பாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எல்க்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ATHER நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தப் பிரிவு வர்த்தகத்தையும் கைப்பற்றும் திட்டத்தில் ஹீரோ ஹோண்டா இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தைப் போல் இந்தியாவில் பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.