உலகளவில் ஐடி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகக்தை பெற்று வரும் இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப் இத்துறையில் இருக்கும் லாபம் மற்றும் வர்த்தகம் ஆதாயங்களை உணர்ந்து இத்துறையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தற்போது தனியார் முதலீட்டு நிறுவனமான Baring Asia கட்டுப்பாட்டில் உள்ளது.
ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ்
Baring Asia பல்வேறு காரணத்திற்காக ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனத்தைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன்-ஐ சேர்ந்த கார்லைல் நிறுவனம் ஹெக்சாவேர்-ஐ கைப்பற்ற 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அறிவித்துள்ளது.
கார்லைல் நிறுவனம்
கார்லைல் நிறுவனம் அறிவித்துள்ள 3 பில்லியன் டாலர் அளவிலான தொகை பிற போட்டி நிறுவனங்கள் பதிவிட்ட தொகையை விடவும் அதிகமாகும். பிற போட்டி நிறுவனங்கள் 2.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பதிவு செய்தது.
போட்டி அதிகம்
இதன் மூலம் கார்லைல் நிறுவனம் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற முன்வந்த பெயின் கேபிடல், கேகேஆர், ஆவுட்சோர்சர் டெலிபர்பார்மென்ஸ் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது. இந்த 3 பில்லியன் டாலர் தொகை இந்திய மென்பொருள் சந்தையில் மிகப்பெரிய டீல் ஆக உள்ளது.
Baring ஏசியா நிறுவனம்
ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1990ஆம் ஆண்டு மும்பையில் துவங்கப்பட்டுப் படிப்படியாக ஐடி சேவை துறையில் வளர்ந்து வந்தது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டில் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை Baring PE Asia நிறுவனம் சுமார் 2,745 கோடி ரூபாய் தொகைக்குக் கைப்பற்றியது.
100 சதவீத பங்குகள் கைப்பற்றல்
இதன் பின்பு 2020 நவம்பர் மாதம் சுமார் 100 சதவீத பங்குகளையும் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் Baring PE Asia கைப்பற்றியது. இந்தக் கைப்பற்றல் திட்டத்தில் ஹெக்சாவேர் நிறுவனத்தின் உரிமையாளர் மாறினாலும் நிறுவனத்தின் தலைவர் மாறவில்லை.
3 பில்லியன் டாலர்
இந்நிலையில் 2021 ஏப்ரல் மாதம் Baring நிறுவனம் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, விண்ணப்பத்தைப் பெற ஆரம்பித்துத் தற்போது கார்லைல் நிறுவனத்தின் 3 பில்லியன் டாலர் ஆஃபரை தேர்வு செய்துள்ளது. இதுக்குறித்து இரு நிறுவனங்களும் இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.