இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும், மக்களையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், புதிய பாதிப்புக் காத்துக்கொண்டு இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவில் வரலாறு காணாத பெரும் தொகையில் பட்ஜெட், அதீத தளர்வுடன் அறிவிக்கப்பட்டு உள்ள நாணய கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ள இதே நிலையில் கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் அதிகளவில் செலவு செய்யத் துவங்கும் காரணத்தால் அமெரிக்காவின் பணவீக்கம் புதிய உச்சத்தை அடையும் நிலை ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
இப்போ இந்தியாவில் என்ன நிலை..?
அமெரிக்கா - இந்தியா
அமெரிக்காவின் நிலை தான் இந்தியாவின் நிலையும், சொல்லப்போனால் இந்தியாவில் கொஞ்சம் மோசமான நிலையை அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இந்தியா பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ஏற்கனவே 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்க திட்டத்தை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விலை பணவீக்கம்
ஆனாலும் மார்ச் மாதத்தில் பல்வேறு காரணங்களால் நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டின் பணவீக்கம் தொடர் உயர்வில் 5.52 சதவீதத்தை அடைந்துள்ளது. இது ஜனவரி மாதம் 4.06 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் பாதிப்பில் இந்தியா
உலகில் பல நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சிப் பாதைக்குச் சென்றுள்ள நிலையில், இந்தியா 2வது கொரோனா அலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்து வருகிறது. ஒருபக்கம் மக்களின் உயிர், மறுபக்கம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை தொடர் சரிவு என மோசமான நிலையை அடைந்து வருகிறது.
அதீத பணவீக்கம், ரூபாய் மதிப்புச் சரிவு
இதன் மூலம் இந்திய பொருளாதாரம் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பும் உலக நாடுகளில் உருவாக உள்ள அதீத பணவீக்கத்தாலும், ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவின் காரணத்தாலும் பொருட்களின் விலை மிகப்பெரிய உயர்வைச் சந்திக்க உள்ளது. இந்த உயர்வு கார், பைக், போன்றவற்றில் மட்டும் அல்லாமல் சாமானிய மக்கள் தினமும் வாங்கும் பால், காய்கறி, குழந்தைகளுக்கு வாங்கும் டைப்பர் முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
மார்ச் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வு காரணமாக மொத்த விலை பணவீக்கம் என்பது 8 வருட உயர்வை அடைந்து 7.39 சதவீதத்தை எட்டியது. மொத்த விலை பணவீக்க குறியீட்டில் 65 சதவீத உற்பத்தி பொருட்கள் இருந்தாலும், உணவு பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவின் வட்டி விகிதம்
இதேவேளையில் அமெரிக்காவின் மார்ச் மாத பணவீக்கத்தின் அளவு 2.6 சதவீதமாக உள்ளது, இதனால் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பெடரல் வங்கி அடுத்தச் சில காலாண்டுகளுக்கு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வரையில் வட்டி விகிதத்தை மாற்ற விரும்பவில்லை என அறிவித்த போதிலும், தற்போது வட்டியை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் நிலை
இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் அமெரிக்கா வட்டியை உயர்த்த வேண்டிய சூழ்நிலையிலும், இந்தியா வட்டியை குறைக்க வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு பெரிய அளவிலான சரிவு ஏற்படும். இதன் இந்தியா பொருளாதாரத்தைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும் நிலையும் உருவாகும்.