இந்தியாவின் டாப் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிராநந்தனி குழும அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடியாகச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது. இக்குழுமம் வருமான வரி ஏய்ப்புச் செய்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் ஹிராநந்தனி குழுமத்திற்குச் சொந்தமான பல சொத்துகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று சோதனையைத் துவங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் விதமாக வருமான வரித்துறை தற்போது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வருமான வரித்துறை பல நிறுவனத்தில் அடுத்தடுத்துச் சோதனை செய்து வரும் நிலையில், தற்போது ஹிராநந்தனி குழுமம் சிக்கியுள்ளது.
இதன் மூலம் வருமான வரித்துறை அடுத்தடுத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது குறிவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்
கொரோனா தொற்றுக்குப் பின்பு மத்திய அரசு அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தேர்வு செய்த துறை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை. இதனால் முடங்கிக் கிடந்த பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்குச் சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஹிராநந்தனி குரூப்
இந்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மிக முக்கியமான நிறுவனமான ஹிராநந்தனி குரூப் வருமான வரி ஏய்ப்புச் செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனையைத் துவங்கியுள்ளது.
24 ஊர்களில் சோதனை
ஹிராநந்தனி குழுமம் மற்றும் தலைவர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் எனச் சென்னை, மும்பை, பெங்களூர் என இந்தியாவில் மொத்தம் 24 நகரங்களில் ஓரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனையைத் துவங்கியுள்ளது.
1978 முதல்
நிரஞ்சன் ஹிராநந்தனி மற்றும் சுரேந்திர ஹிராநந்தனி ஆகிய இரு சகோதரர்கள் இணைந்து 1978 ஆம் ஆண்டு ஹிராநந்தனி டெவலப்பர்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கினர். இந்நிறுவனம் கடந்த 40 வருடத்தில் மகாராஷ்டிராவில் பல முக்கியமான மற்றும் பிரலமான திட்டங்களை உருவாக்கியுள்ளது.
ரியல் எஸ்டேட்
மேலும் நிரஞ்சன் ஹிராநந்தனி மற்றும் சுரேந்திர ஹிராநந்தனி ஆகியோர் தனித்தனியாக ஒரு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இதில் நிரஞ்சன் ஹிரானந்தானி Hiranandani Communities என்னும் நிறுவனத்தையும், சுரேந்திர ஹிராநந்தானி House of Hiranandani என்னும் நிறுவனத்தை உருவாக்கி சேர்மன் மற்றும் தலைவராக இருந்து வருகின்றனர்.
பிற துறை வர்த்தகம்
ஹிராநந்தனி குரூப் நிறுவனம் தற்போது ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் அல்லாமல் டேட்டா சென்டர், பள்ளிகள், கல்லூரிகள் என் ஹெல்த், கல்வி, எனர்ஜி மற்றும் ஹஸ்பிடாலிட்டி என 5 பிரிவில் தனது வர்த்தகத்தை இந்த 40 வருடத்தில் விரிவாக்கம் செய்துள்ளது.