இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே பொருளாதாரச் சரிவும், மந்தமான வர்த்தகச் சூழ்நிலையும் இருந்து வரும் காரணத்தால் நாட்டில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது குறிப்பிடதக்கது.
இதன் பின்பு கொரோனா தொற்றால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சரிவு, சீனா உடனான எல்லை பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கப்பட்ட முடிவுகள் எனத் தொடர்ந்து இந்தியாவின் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்திய இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முக்கியமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
3 சதவீதம் மட்டுமே
இந்தியாவில் சுமார் 800 நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அடுத்த காலாண்டுக்குப் புதிதாக ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு அளவீடு 15 வருட மோசமான நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வை செய்த ManpowerGroup Employment Outlook தெரிவித்துள்ளது.
பணிநீக்கம்
இந்தக் கொரோனா காலத்தில் இந்தியாவில் வர்த்தகத்தை இழந்து மோசமான நிலையில் இருக்கும் பல லட்ச நிறுவனங்கள், தங்களது நிதிநிலையை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரித்துக்கொள்ளவும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்து வரும் இந்தச் சூழ்நிலையில் ManpowerGroup Employment Outlook-ன் ஆய்வு மிக முக்கியமானதாக உள்ளது.
இந்தியா முழுவதும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் பல லட்ச நிறுவனங்கள் இக்கொரோனா காலத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஆய்வு
ManpowerGroup Employment Outlook செய்த ஆய்வில் 2020ஆம் நிதியாண்டில் ஊழியர்களைப் பணிக்குச் சேர்ப்பதில் மிகவும் கவனமாகச் செயல்பட்ட நிலையில், இந்த ஆய்வில் பங்குபெற்ற 813 நிறுவனங்கள் மத்தியில், 7 சதவீத நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், 3 சதவீத நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், 54 சதவீத நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இக்காலாண்டில் நிச்சயம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுப் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
15 வருடம்
இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை 15 வருட மோசமான நிலையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அதிகளவிலான பணிநீக்கம் நடுத்தர மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் சீன முதலீடுகளுக்கும், சீன டிஜிட்டல் சேவைகளுக்குப் பாதுகாப்பு காரணத்திற்காகத் தடை செய்யப்பட்ட பின்பு அதிகளவிலான பணிநீக்கம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்களின் இந்த முடிவு பல கோடி இளைஞர்களை வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.