பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்துடன் காலம் காலமாக இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் அறிக்கையை, பொதுப் பட்ஜெட் அறிக்கையுடன் சேர்த்து ஒற்றை பட்ஜெட் அறிக்கையாக வெளியிட துவங்கியது.
Recommended Video
ஒரு துறைக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டின் நிலையை மாற்றியமைக்கப்போகும் சக்தி கொண்டுள்ளது என்பதற்காகத் தான் ரயில்வே துறைக்குத் தனியாகப் பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதேபோல் தற்போது விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முக.ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி விவசாயத் துறைக்குத் தனியாகப் பட்ஜெட் வெளியிட உள்ளது.
திமுகக் கட்சி தேர்தல் வாக்குறுதி
திமுகக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை திட்டம். தமிழ்நாட்டின் பல கோடி விவசாயிகள் எதிர்பார்க்கும் இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டில் சாத்தியப்படுமா..? என்பது தான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2021-22
ஜூலை மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசு 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை குறித்துத் தற்போது தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என்பது அரசு வட்டாரங்களின் தகவல்.
விவசாயத் துறை பட்ஜெட்
இந்நிலையில் விவசாயத் துறை பட்ஜெட் அறிக்கை மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் போல் வடிவம் பெற்றால், சட்டமன்றத்தில் விவசாயத் துறை பட்ஜெட் அறிக்கையை யார் தாக்கல் செய்வார்..? இரண்டு நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா..? இரண்டு பட்ஜெட் அறிக்கையும் ஓரே நாளில், நிதியமைச்சரே தாக்கல் செய்வாரா..? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
விவசாயம், விவசாயி
தமிழ்நாட்டில் விவசாயத் துறையின் உற்பத்தி அதிகரிப்பதும், அவர்களின் வருமானத்தைப் பெருக்குவது, விவசாயிகளின் பாதுகாப்பு, வாழ்வியல், மேம்படுத்தல் ஆகியவை முக்கியக் குறிக்கோள் ஆக இருக்கும் எனத் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சாதனை
விவசாய துறைக்குத் தனிப் பட்ஜெட் என்பது தமிழ்நாட்டில் இந்த நிதியாண்டில் சாத்தியமானால், இந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்குத் தனிப் பட்ஜெட் அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு-ஆக இருக்கும்.
50 சதவீத மக்கள் தொகை
நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பு, வர்த்தகம், நுகர்வோர் சந்தை ஆகியவை விவசாயத் துறையை நம்பியிருக்கும் காரணத்தால் இது சிறந்த முடிவாக இருக்கும். இதேபோல் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்து உள்ளனர்.
வலிமையான விவசாயத் துறை
இதேபோல் கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படாத ஓரே துறை விவசாயம். முதல் கொரோனா தொற்று அலையிலும் சரி, 2வது தொற்று அலையிலும் சரி மக்களுக்கு உணவு, காய்கறி, உணவுப் பொருட்கள் கிடைப்பதில் எவ்விதமான பாதிப்பும் இல்லை.