சீனாவுக்கு இணையாக உற்பத்தி துறையிலும், ஏற்றுமதியிலும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு வரும் நிலையில் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தற்போது மிகவும் முக்கியத் தேவையாக விளங்குவது உள்கட்டுமான திட்டங்கள் தான்.
இதற்காகப் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சிமெண்ட் தேவை அதிகரித்துள்ளது. இதேவேளையில் உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விட்டுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்த வர்த்தகத்தைக் கைப்பற்றும் இறுதி கட்டத்தில் தற்போது அதானி குரூப் மற்றும் JSW குரூப் உள்ளது.
ஹோல்சிம் நிறுவனம்
சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோல்சிம் நிறுவனம், இந்தியாவில் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், தற்போது இவ்விரு நிறுவனத்தையும் மொத்தமாக விற்பனை செய்து விட்டு இந்திய வர்த்தகச் சந்தையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட்
சுமார் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 77,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படும் இவ்விரு நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் எளிதாக இந்தியாவின் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க முடியும். ஆனால் டீல்-ன் தொகை மிகவும் பெரிதாக இருக்கும் நிலையில் சிறு நிறுவனங்கள் போட்டிப்போட முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதானி குரூப் Vs JSW குரூப்
இந்நிலையில் ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகிய இரு நிறுவனத்தையும் கைப்பற்ற கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப், சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
10 வருடம்
அடுத்த 10 வருடத்திற்கு இந்தியாவில் சிமெண்ட் தேவையும் அதன் வர்த்தகமும் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் நிலையில் ஹோல்சிம் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெறலாம்.
66 மில்லியன் டன்
ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகிய இவ்விரு நிறுவனத்தின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தி அளவு 66 மில்லியன் டன். முதல் இடத்தில் இருக்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் வருடத்திற்கு 117 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்கிறது.
பங்கு இருப்பு
இந்தியாவில் ஹோல்சிம் நிறுவனம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் வாயிலாக 63.1% பங்குகளை வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அம்புஜா சிமென்ட் நிறுவனம், ஏசிசி-இன் 50.05% பங்குகளை வைத்திருக்கிறது. ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Holcim) நேரடியாக ACC இல் மற்றொரு 4.48% பங்குகளை வைத்திருக்கிறது.