தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகளில் மானிய விலையிலும் இலவசமாகவும் கிடைக்கும் பொருட்களை தான் முக்கிய உணவு ஆதாரமாக பயன்படுத்துகிறார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மாதம் தோறும் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஆட்டோ போன்ற வாகனத்தில் செல்ல வேண்டும் அல்லது யாராவது ஒருவரின் உதவியை நாட வேண்டும். வாடகை வாகனத்தில் சென்றால் அதற்கே தனியாக பணம் செலவு செய்ய வேண்டும். இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தாயுமானவர் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக முன் கூடியே அறிவிக்கப்பட்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே வண்டியிலேயே பொருட்கள், எடை மெஷின், ரேஷன் கார்டு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவற்றை சரிபார்த்து அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தற்போது ஆட்சி மாறி விஜய் முதலமைச்சராக இருக்கிறார். முந்தைய ஆட்சியின் பல திட்டங்களையும் அவர் தொடர்ந்து வருகிறார் நிறுத்தவில்லை.
அந்த வகையில் தாயுமானவர் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலத்தை சேர்ந்த பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜுன் மாதத்தின் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
எனவே முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதே போல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாதத்தின் முதல் வாரத்திலேயே தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

