வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?

சென்னை: ஹோம் லோன் வாங்கிய பின்பு அதனை சரிவர செலுத்த முடியவில்லையா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. நீங்கள் சரிவர EMI செலுத்தவில்லை என்றால் வங்கிகள் உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எடுக்கும் போது RBI-இன் பாதுகாப்பு வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம். அவை என்னென்ன வழிமுறைகள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்

பெரும்பாலான மக்கள் சொந்த வீடுகளை வாங்குவதற்கு ஹோம் லோன்களையே நம்பியுள்ளனர். மேலும் இதற்கு மாதாமாதம் EMI செலுத்த வேண்டி இருக்கும். சில சமயங்களில், நீங்கள் வாங்கும் லோன்களின் தொகையை பொறுத்து 20 முதல் 30 ஆண்டுகள் வரை கூட, இந்தத் தவணை நீட்டிக்கப்படலாம்.

 வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?

ஆனால் நீண்ட காலம் என்பதால் இந்த EMIகளை திருப்பி செலுத்துவதில் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக வேலை இழப்பு, உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற காரணங்களால் சரிவர EMI செலுத்த முடியாமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் வங்கிகள் உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உங்கள் வீடுகளை ஏலத்திற்கு விட முயற்சிக்கும்.

இந்தச் சூழலில் ஆர்பிஐ சொல்லும் சில பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தலாம். அவை என்ன வழிமுறைகள் என்பதை விரிவாக பார்ப்போம்.

வாரா கடன் என்றால் என்ன?: நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் EMIகளை நிதி நிறுவனத்திற்கோ அல்லது வங்கிகளுக்கோ செலுத்தத் தவறினால் வங்கிகள் உங்களது பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கும். இருந்தாலும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு EMIயைத் தவற விட்டு அதன் பிறகு அபராதத்துடன் சரி செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் நீங்கள் தொடர்ந்து மூன்று மாத EMIகளைத் தவறவிட்டால், உங்கள் வீட்டுக் கடன் அவர்களின் ஆவணங்களில் செயல்படாத சொத்து (NPA) எனக் குறிப்பிடப்படும். இது போன்ற நேரங்களில் வங்கிகள் உங்களுக்கு 90 நாட்கள் வரை அவகாசம் தருகின்றன. அதற்குள் EMI மற்றும் அதற்கான அபராதத்தைச் செலுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள்: வீட்டுக் கடனை நீங்கள் சரிவர செலுத்தாமல் இருந்தால், உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண் ஆகும். இந்த கிரெடிட் ஸ்கோரின் மூலம் உங்கள் நிலுவை கடன், முடிக்கப்பட்ட கடன்கள், நீங்கள் கடனை திருப்பி செலுத்திய தேதி போன்ற உங்களின் அனைத்து கடன் வரலாற்றையும் பார்க்க முடியும். கிரெடிட் ஸ்கோர் குறைந்தால் நீங்கள் பிற்காலத்கில் கடன் வாங்குவதில் சிக்கல் இருக்கலாம்.

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் என்ன?: வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நபர்கள் மேல், வங்கிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். 2002ஆம் ஆண்டின், SARFAESI சட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை திரும்பப் பெற, கடன் பெற்றவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடலாம்.

கடன் வழங்குபவர்கள் தங்கள் பட்டியலிலுள்ள செயல்படாத சொத்துக்களை கையாள்வதற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சொத்துக்களைக் கைப்பற்றுவதும் ஏலம் விடுவதும் கடன் வழங்குவோரின் கடைசி முயற்சியாகும், மேலும் ஆரம்பத்தில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பல அறிவிப்புகளை கடன் வழங்குநர்கள் வெளியிடுகிறார்கள். அதனையும் மீறும் பட்சத்தில் வங்கிகள் கடன் பெற்றவர் மீது இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.

RBIஇன் பாதுகாப்பு வழிமுறைகள்: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வீட்டுக் கடன் செலுத்தாத சந்தர்ப்பங்களில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களின் நலன்களைப் பாதுகாக்க அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. அதன்படி கடன் வழங்குபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன் கடன் பெற்றவர்களுக்கு, ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு அவர்களுக்கு 60 நாள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று RBI கூறுகிறது.

மேலும் கடன் பெற்றவர் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களை அடிப்பது, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சென்று அவர்களை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ஆர்பிஐ கூறுகிறது.

அதேபோல் கடன் வழங்கியவர் 30 முதல் 60 நாட்கள் வரை கால அவகாசம் தராமல் கடன் பெற்றவரின் சொத்துக்களை கையகப்படுத்துதல் மற்றும் ஏலம் விடுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

வங்கிகள் கொடுத்த காலக்கெடுவையும் மீறி உங்களால் கடன் செலுத்த முடியாத பட்சத்தில், கடன் தந்த நிறுவனங்கள் உங்களுடைய சொத்துகளை, ஏலம் விடக் கூடும். ஆனால் உங்களின் நிலுவைத் தொகையை விட அதிகமான விலைக்கு ஏலம் போனால் மீதி தொகையை நீங்கள் பெற முடியும்.

ஆனால் கடன் தந்த வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ கடன் பெற்றவரை அடிப்பது மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது போல் தெரிந்தால், கடன் பெற்றவர்கள், கடனளிப்பவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆர்பிஐ விதிகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+