கொரோனாவால் உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வந்தாலும், வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு என்பது மிகவும் அதிகம். இதில் ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைப் பார்த்தால் சுமார் 24 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மாபெரும் சரிவில் இருந்து மீண்டும் வருவது என்பது மிகவும் சவாலான விஷயம்.
இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்தில் உற்பத்தித் துறை, ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள் ஆகிய துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை மக்கள் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு, சம்பள குறைப்பு, வர்த்தக முடக்கம், மோசமான வர்த்தகச் சூழ்நிலை எதிர்கொண்ட காரணத்தால் இத்துறையில் வர்த்தகம் 95 சதவீதம் மாயமானது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை இருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் மீண்டு வருவதும் மிகவும் கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது இந்திய ரியல் எஸ்டேட் துறை.
ரியல் எஸ்டேட்
மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த வர்த்தகம் 95 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு இத்துறை சார்ந்த ஊழியர்களும், வர்த்தகர்களும் அதிர்ச்சி அடைந்தன.
விற்பனை அளவீடுகள்
இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலகட்டமான ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வெறும் 9632 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் - செப்டம்பர் காலாண்டில் சுமார் 33,403 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் அதே காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 50 சதவீதம் மட்டுமே என்பது கூடுதல் தகவல். இந்தத் தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட வீடுகள் படி திரட்டப்பட்டது.
சூடுபிடிக்கும் விற்பனை
ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து நிதி நெருக்கடி இருந்தாலும், நாடு முழுவதும் விழாக் காலம் முன்னிட்டு பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதோடு நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு சலுகைகள் விலை தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டு வருவதால் விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது.
முக்கிய முதலீடு
இந்தக் கொரோனா பாதிப்பால் மக்கள் மத்தியில் முதலீடு குறித்த மனமாற்றம் பெரிய அளவில் மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மக்கள் புதிய முதலீடுகளைத் தேர்வு செய்யாமல் நிலையான லாபத்தைத் தரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய மன மாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் எப்போதும் இல்லாமல் மக்கள் தங்கத்தில் பணக்காரர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவது இந்த லாக்டவுன் காலத்தில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
டிமாண்ட்
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு டிமாண்டு மிகவும் அதிகமாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் சிறிய வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்குப் பெரிய வீடுகளுக்கு மாறவும், வாங்கவும் விரும்புகின்றனர்.