டெல்லி: உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவினால் நாளுக்கு நாள், அதன் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கமும் பல நாடுகளுக்கு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு இதனை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பயணத்தை ரத்து செய்துள்ளன. மேலும் மக்கள் பெரும்பாலும் கூடும் இடங்களை தவிர்க்கவும், இப்படி பலவாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
விசா நிறுத்தம்
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு அதிரடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை வரை அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த அடி
இதனால் விமான சேவையினை வழங்கி வரும் விமான நிறுவனங்கள் பலத்த அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி எனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டுகள், உள்நாட்டு விமான பதிவுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. விமான நிறுவனங்கள் இவ்வாறு அதிகளவில் ரத்து செய்யப்படுவதை தவிர்க்க, பல அதிரடி சலுகைகளையும் வழங்கி வருகிறது.
வருவாய்
ஆனாலும் மக்கள் கொரோனா பயத்தினால் தங்களது பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர். இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டம் காண வாய்ப்புள்ளது. மேலும் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்தினை தடைசெய்துள்ள நிலையில், சில நாடுகளுக்கு செல்லும் குறிப்பிட்ட விமானங்களின் வருவாய் பாதிக்கப்படலாம்.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
இது தான் இப்படி எனில் வெளி நாடுகளூக்கு செல்லும் மக்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் மக்கள் என பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆக மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடங்களுக்கு செல்வதை தவிர்த்துள்ள நிலையில் ஹோட்டல்களில் போய் தங்குவதும் வெகுவாக குறையும். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 40-50% ஹோட்டல் புக்கிங் குறையலாம் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹோட்டல் கட்டணம் குறைவு
இந்த நிலையில் ஹோட்டல் கட்டணங்கள் கடந்த ஒரு வாரத்தில் கிட்டதட்ட 18% குறைந்துள்ளன. கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தான் உள்ளது. ஆக ஏராளமான ஆடம்பரமான சொகுசு அறைகள் காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனவாம். அதிலும் உதய்பூர், கோவா மற்றும் கேரளா போன்ற இடங்களில் அறைகள் வெகுவாக காலியாக இருக்கின்றனவாம். இதனால் ஹோட்டல் வருவாயும் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதைவிட மோசம் விமானத்துறை
இதனுடன் ஒப்பிடும்போது விமானத்துறை இன்னும் மோசமான உள்ளது. ஏனெனில் கடந்த வாரத்தில் கட்டனம் 40% சரிந்துள்ளது. உதாரணத்திற்கு டெல்லி - சென்னை விமான டிக்கெட்டின் விலை முன்பு 5,000 ரூபாய் எனில், தற்போது 2,797 ரூபாய்க்கு வாங்கலாம். அந்தளவுக்கு விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்துள்ளது.
டிக்கெட் பதிவு குறைந்துள்ளது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுவனமான யாத்ரா, சீனா, இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தற்காலிகமாக பயணத்தினை ரத்து செய்துள்ள நிலையில், அதன் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு பதிவுகளின் எண்ணிக்கை 12% குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
போக்குவரத்து துறை பாதிக்கும்
இவ்வாறு கொரோனாவின் பயத்தினால் உலகம் முழுவதும் இது போன்ற பெரும்பாலான கட்டுபப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து துறை மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தனது அறிக்கையினை வெளியிட்டுள்ள கேர் ரேட்டிங்க்ஸ் இந்தியாவில் அனைத்து வகையான ஹோட்டல்களிலும் ஏப்ரல் - மே மாதங்களில் புக்கிங் 30 - 50% இருக்கும்.
ஹோட்டல் புக்கிங் குறையலாம்
ஏனெனில். இந்த் நேரத்தில் விடுமுறை என்பதால் மக்கள் பல இடங்களுக்கு செல்ல புக் செய்வார்கள். ஆனால் நாட்டில் தற்போது நிலவி வரும் நிலையில் அவை தவிர்க்கப்படலாம். அல்லது ஒத்தி வைக்கப்படலாம். அதிலும் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மா நிலங்களில் புக்கிங் செய்யப்படும் ஹோட்டல்கள் ரத்து செய்யப்படலாம்.
விமான டிக்கெட் பதிவு
ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்டாரா, கோஏர், ஸ்பைஷ்ஜெட், உள்ளிட்ட பல உள் நாட்டு ஏர்லைன் நிறுவனங்கள் 150 சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவே தினசரி 15 - 20% விமான டிக்கெட்டுகள் பதிவு செய்வது குறைந்து வருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. சீனா ஹாங்காங், ஈரான், இத்தாலி, ஜப்பான், மலேசியா, கொரியா, சிங்கப்பூர் மற்றூம் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்திய பயணத்துறை சர்வதேச பயணிகள் போக்குவரத்து வளர்ச்சியில் 20.2 0 24.7% தாக்கதினை ஏற்படுத்தக்கூடும்.
பயணத்திற்கு தடை
சுமார் தற்போது 120 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் ஜனவரி 20 முதலே உள் நாட்டு விமானத் துறை பாதிக்கத் தொடங்கியது. ஏற்கனவே பல நாடுகளுக்கு நிறுத்தப்பட்டதால் அவை பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மேலும் 12 நாடுகளுக்கு பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.
பெரும் தொற்று நோய்
உலகம் முழுக்க சுமார் 4,300 பலி கொண்டுள்ள கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் உலக சுகாதார அமைப்பு இதனை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ள நிலையில் சர்வதேச அளவிலான சுற்றுலா துறை, மற்றும் விமானத் துறை., ஹோட்டல் உள்ளிட்ட துறைகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது