லாக்டவுன் நேரத்தில் இந்தியா முழுவதும் வீடு மற்றும் அலுவலகங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்த காரணத்தால் காலியான அலுவலகம், வீடுகள் தெருவுக்குத் தெரு இருந்தது.
குறிப்பாக ரியஸ் எஸ்டேட் துறையை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மெட்ரோ நகரங்களுக்கு இது பெரும் பாதிப்பாக இருந்தது.
ஆனால் இன்று நடுத்தர மக்களைப் பயமுறுத்தும் வகையில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வாடகை மற்றும் குத்தகை வீட்டிற்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
லாக்டவுன்
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடனே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட போதே சொந்த ஊரில் இருந்து ஆன்லைனில் பிடித்து வந்த பிள்ளைகளின் குடும்பங்கள் பெரு நகரங்களுக்குத் திரும்பியது. இதேபோல் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்பு எஞ்சியிருக்கும் சிலரும் சொந்த ஊரில் இருந்து பெரு நகரங்களுக்குப் படையெடுக்கத் துவங்கினர்.
அலுவலகங்கள், வீடுகள்
இவை அனைத்தும் கடந்த 5 மாதத்தில் நடந்த காரணத்தால் காலியாக இருந்த அலுவலகங்கள் முதல் வீடுகள் வரையில் அனைத்தும் நிரம்பியது. இதன் எதிரொலியாக இந்தியாவின் 7 மெட்ரோ நகரங்களில் குத்தகை ஒப்பந்தங்களின் அளவு 6-20 சதவீதம் வரையில் அதிகரித்து உள்ளது.
குத்தகை ஒப்பந்தங்கள்
குத்தகை ஒப்பந்தங்களில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி கடந்த 3 வருடத்தில் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதேவேளையில் கடந்த 5 மாதத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு அருகில் ஹைப்ரிட் வேலை என்பதால் பெரிய வீடுகளுக்கு மாறியவர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு வாடகை
குறுகிய காலத்தில் ஏற்பட்ட டிமாண்ட் காரணமாக வீட்டு வாடகை, குத்தகை தொகை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல், மாத சம்பளத்தில் பெரும் பகுதியை வாடகையாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.