தமிழ்நாட்டில் வர்த்தகத்தைத் துவங்கவும், அலுவலகத்தை அமைக்கவும், உற்பத்தி தளத்தை அமைக்கவும் பிற மாநிலங்கள், உலக நாடுகளில் இருந்து நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தமிழ்நாட்டில் 3 இடங்களைக் குறிவைத்துத் தான் நகர்ந்து வருகின்றன.
சென்னை, கோவை, ஓசூர்
வெளிநாட்டில் இருந்து வரும் ஐடி, டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சென்னைக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கும், புதிய உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூர்-க்கும் படையெடுத்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டு சந்தைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஓசூரை முக்கிய டார்கெட்-ஆக மாற்றியுள்ளது.
ஏன் ஓசூர்
இப்படிச் சென்னை, கோவைக்கு அடுத்தப் படியாகத் தொழிற்துறை முதலீட்டை ஈர்ப்பதிலும், சென்னை, கோவைக்கு இணையாக ஓசூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் ஆரம்பப் புள்ளி என்ன தெரியுமா..?
50 வருடங்கள்
50 வருடங்களுக்கு முன்பு 1973ஆம் ஆண்டு மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்த ஓசூர்-ஐ தமிழ்நாடு அரசின் சிபிகாட் வாயிலாகத் தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்கவும், வர்த்தகத்தை உருவாக்கவும் ராணிப்பேட்டையை சேர்த்து மொத்த 2 பகுதிகளைப் பெரிய அளவில் மேம்படுத்தியது.
MSME நிறுவனங்கள்
1973 முதல் ஓசூர் தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சி சில முன்னணி நிறுவனங்களையும், அதிகப்படியான MSME நிறுவனங்களைக் கொண்டு இன்று அர்பன் காஸ்மோபொலிடன் ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சென்னை, கோவைக்கு இணையாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ஓசூரை முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கப் பல முக்கியக் காரணம் உள்ளது.
MSME நிறுவனங்கள்
ஒருபக்கம் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் உதவும் சப்ளையர்கள் அதாவது உதிரிப்பாகங்கள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்ய அதிகளவில் MSME நிறுவனங்கள் உள்ளது. இதைத் தொடர்ந்து பொருட்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க ஏதுவான மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை போக்குவரத்து உள்ளது.
ஊழியர்கள், போக்குவரத்து
ஐடி முதல் உற்பத்தி வரையில் அனைத்து துறைக்கும் தேவையான படித்த திறன் வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உள்ளது. இதனால் புதிதாக உற்பத்தி தொழிற்சாலை அல்லது நிறுவனத்தைத் துவங்கும் முதலாளிகளுக்குக் குறைந்த செலவிலேயே ஊழியர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தாண்டி மருத்துவம், போக்குவரத்து, வர்த்தக விரிவாக்கம் என அனைத்து கட்டமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.
3 நிறுவனங்கள்
ஓசூரில் முதலீல் டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலாண்டு, டைட்டன் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தியைத் தாண்டி பார்மா, எலக்ட்ரானிக்ஸ், புட் ப்ராசசிங், ஆடை, கிரைனைட், லாஜிஸ்டிக்ஸ், கிடங்கு வர்த்தகம் எனப் பல பிரிவில் வர்த்தகத்தையும் நிறுவனங்களையும் ஓசூர் ஈர்த்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், ஓலா
இதில் சமீபத்தில் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, 2500 கோடி ரூபாயில் ஓலா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை ஆகியவை ஓசூர்-ஐ இந்திய வர்த்தக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றியுள்ளது. இதற்குக் கடந்த 50 வருடத்தில் தமிழக அரசு தொடர்ந்து ஓசூர் MSME துறைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமே.
2,223 ஏக்கர் நிலம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி கூறுகையில் சிப்காட் அமைப்பின் 3வது மற்றும் 4வது கட்ட வளர்ச்சி திட்டத்திற்கு 2,223 ஏக்கர் நிலம் தேவை, இதில் 1,400 ஏக்கர் நிலத்தை அரசு ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள நிலத்தை விரைவில் கைப்பற்றித் தொழிற்சாலை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.