டெல்லி: கடந்த சில வாரங்களாக அதானி குழுமத்தில் அடுத்தடுத்த சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானதில் இருந்தே, அதானி குழும பங்குகள் பலவும் பாதாளம் தொட்டுள்ளன.
இது ஒரு புறம் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் மக்கள் பெரும்பான்மையாக நம்பி முதலீடு செய்யும் இடமான எஸ்பிஐ, எல்ஐசி நிறுவனங்களும் அதானி குழுமத்தில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளன. இது இன்னும் அச்சமூட்டும் ஒன்றாக மாறியுள்ளன. சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்? எஸ்பிஐ, எல் ஐ சி நிறுவனங்கள் மற்றும் மற்ற பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டு விகிதம் அதானி குழுமத்தில் எவ்வளவு வாருங்கள் பார்க்கலாம்.
காங்கிரஸின் கருத்து என்ன?
இது நிதி ரீதியான ஒரு பிரச்சனை என்பதோடு மட்டும் அல்லாது, தற்போது அரசியல் ரீதியாகவும் புயலை கிளப்ப தொடங்கியுள்ளது. வரவிருக்கும் பிப்ரவரி 6ம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வலியுறுத்தி இத்தகைய போராட்டமானது நடக்கவுள்ளது.
என்ன கோரிக்கை
இந்த போராட்டத்தின்போது அதானி முறைகேடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நடத்தப்படவுள்ளது.
காங்கிரஸ் தரப்பு வாதம்?
பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயப்படுத்தி மக்கள் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வைத்திருக்கிறது. இது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணம், மத்திய பாஜக அரசால் இப்போது ஆபத்தில் இருக்கிறது. இதனால், இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு கடன்?
வங்கிகள் தரப்பில் அதானி குழுமத்தில் 80,000 கோடி ரூபாய் என்ற அளவில் கடன் கொடுத்துள்ளது. இதில் எஸ்பிஐ-யின் பங்கு மிக முக்கியமானது எனலாம். எஸ்பிஐ 27,000 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதே பேங்க் ஆப் பரோடா 5500 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7000 கோடி ரூபாயும் கடன் கொடுத்துள்ளன. ஆக இந்த கடனின் எதிர்காலம் குறித்தும் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை எச்சரிக்கை
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையில் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த நிதி திரட்ட முடியாத நிலையில் உள்ளன. மேற்கண்ட கடனில் பலவும் பங்குகளை பிணையமாக வைத்தும் கடன் பெற்றுள்ளன. ஆக இதுவே மேற்கொண்டு கவலையளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
வங்கிகளின் எண்ணம்
அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன. பல வங்கிகளும் தற்போது தங்கள் வசம இருக்கும் பங்குகளை விற்பனை செய்து விடலாமா? என யோசித்து வருகின்றன. ஆனால் அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் அது மேற்கொண்டு வங்கிகளின் கடன் புத்தகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
எல்ஐசியின் நிலை என்ன?
மறுபுறம் அதானி குழும பங்குகள் மேற்கொண்டு சரிய இதுவும் காரணமாக அமையலாம். குறிப்பாக நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமும் முதலீட்டாளருமான எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் கடன் மற்றும் பங்குகளில் 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.3000 கோடி ரிட்டர்ன்
சமீபத்தில் அதன் உரிமை பங்கு வெளியீடு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து, 9,15,748 பங்குகளை வாங்கியிருந்தது. ஆனால் இந்த எஃப்பிஓ ஆனது ரத்து செய்யப்பட்ட நிலையில் எல்ஐசி பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
கவலை வேண்டாம்
அதானி குழுமத்தில் பொதுத்துறை வங்கிகளில் பெரியளவில் முதலீடு செய்யவில்லை. ஆக இது குறித்து கவலைப்பட வேண்டாம். அதேபோல எல் ஐ சியின் மொத்த முதலீட்டில் அதானி குழுமத்தின் 1% கீழாகத் தான் உள்ளது. ஆக இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என கூறப்படுகிறது. இது அரசின் இலக்கினை தாண்டி முதலீடும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எனினும் இனி இந்த முதலீட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பது பலருக்கும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
நிர்மலா சீதாராமன்?
இந்திய சந்தைகள் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அதானி பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாகவும், ஹிண்டன்பர்க் மற்றும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்கு இடையே நடந்து வரும் மோதலால் இந்திய வங்கி அமைப்பு மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நிதி அமைப்பு நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.