டெல்லி: இன்றைய காலகட்டத்தில் சீன பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய இரண்டாவது பொருளாதாரமாக இருந்தாலும், ஒரு காலத்தில் சீனாவினை விட வேகமாக வளரக்கூடிய, சீனாவினை விட பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தது என்கிறார் சுப்ரமணியன் சுவாமி. இது சன்டே கார்டியனுக்கு அளித்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் அறிக்கையாகும்.
இது குறித்து அதன் தளத்தில் வெளியான செய்தியில், குறைந்தது 750 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய பொருளாதாரம் சீனாவினை விட பெரியதாக இருந்ததாம். ஏன் மிக வேகமாகவும் வளர்ந்து வந்ததாக கூறுகிறது.
ஆனால் இந்த வளர்ச்சியெல்லாம் கிபி 1750 வரை தான் நீடித்ததாம். இந்தியாவின் பல போர் படையெடுப்புக்கு பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்குமான இடைவெளி குறையத் தொடங்கியதாம்.
பலமான வீழ்ச்சி
ஆனால் 1815-க்கு பிறகு இது தொடர்ந்து சரிய ஆரம்பித்து கொள்ளை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. 1947க்கு பிறகு இந்தியா சோசியலிசம் மற்றும் நட்பு முதலாளிதுவத்தின் பொருத்தமற்ற பொருளாதார கொள்கையினால் தடுமாறியது. இதன் பிறகு 1965 - 68 முதல் பலமான பஞ்சத்தாலும், 1990 -91-களில் அன்னிய செலவாணி நெருக்கடியையும் எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எப்போது சீனாவினை முறியடிக்கும்
ஆனால் அதன் பிறகு படிப்படியாக மீண்டும் துளிர் விடத் தொடங்கிய பொருளாதாரம், கடந்த 2016ம் ஆண்டு வரையில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 8% வளர்ச்சியினை கண்டது. அது மட்டும் அல்ல, உணவு தானிய உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றது. அப்போது வரையில் இந்தியா எப்போது சீனாவினை முறியடிக்கும் என்ற நிலையே நீடித்து வந்தது. இது அப்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட ஒரு விஷயமும் கூட.
இந்தியாவின் வளர்ச்சி
ஆனால் 2016-க்கு பிறகு யார் கண்பட்டதோ தெரியவில்லை, பொருளாதாரத்தில் இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்ற ஆழமான புரிதல் இல்லாததால், இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இது 4% ஆக குறைந்துள்ளது. ஆனால் இது நடப்பு நிதியாண்டில் மைனஸ் 5% குறைவாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பரந்த இடைவெளி
ஆக இப்படி ஒரு நிலையில் இந்தியா சீனாவினை விஞ்சுமா? அது நடக்குமா? சாத்தியமானதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் கடந்த 1980 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ஜிடிபி விகிதம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது இந்தியாவுடன் ஒப்பிடும்போது பரந்த இடைவெளியினை உருவாக்கியுள்ளது.
தனி நபர் வருமானம்
தெளிவாக சொல்லவேண்டுமானால் சீனாவின் வளர்ச்சி விகிதமானது இந்தியாவுடன் ஒப்பிடும்போது 75% அதிகமாகும். தனி நபர் வருமானமானது 1980-களில் இரு நாடுகளிலும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் தாசாப்தங்களில் சீனா பலமான வளர்ச்சி கண்டது. இது அதிகளவு வேறுபாட்டினை கண்டது.
முன்பு மக்கள் தொகை அளவு
1952-களில் சீனாவின் மக்கள் தொகையானது இந்தியாவினை விட 57% அதிகமாக இருந்தது. ஆனால் 1990-களில் இது வெறும் 28% தான். தற்போது சீனாவின் மக்கள் தொகையானது ஆண்டுக்கு 1.0%க்கும் குறைவாகவே வளர்ச்சி கண்டு வருகிறது, ஆனால் அதே நேரம் இந்தியாவின் மக்கள் தொகையானது ஆண்டுக்கு 1.7% ஆக வளர்ச்சி கண்டு வருகிறது.
சீனாவை விட அதிகரிக்கும்
ஆக இப்படி இந்த விகிதங்கள் நீடிக்குமானால் 2025க்குள் சீனாவினை இந்தியா முறியடிக்கும் என்றும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2005 முதல் கொண்டே ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை சீனா உணர்ந்து கொண்டுள்ளது. தற்போது இந்திய மக்களின் சராசரி வயது 27 ஆண்டுகள். ஆனால் இது சீனாவில் 35 ஆண்டுகளாகும். 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 1.28 பில்லியன். இதே சீனாவில் 1.36 பில்லியன் ஆகும்.
சீனா தான் டாப்
இப்படி சீனா ஒவ்வொரு துறையிலும் அது மக்கள் தொகையாகட்டும், பொருளாதாரமாகட்டும் சாதகமான வளர்ச்சியினை கண்டு வருகிறது. ஆனால் இந்தியாவோ ஒவ்வொரு படியாக கீழே இறங்கி கொண்டு போகிறது. இதற்கிடையிலும் அமெரிக்கா சீனா வர்த்தகப் போர், சீனா இந்தியா எல்லை பதற்றம், கொரோனா வைரஸ் இப்படி சுற்றி சுற்றி சீனா அடி வாங்கினாலும், இன்றைய சர்வதேச பொருளாதாரத்தில் மீள்ச்சி கண்டு கொண்டு இருப்பது சீனா தான்.
தொடர்ந்து வளர்ச்சி காணும் சீனா
உலகமே இன்று கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டு இருந்தாலும். இன்றும் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான வளர்ச்சியினை கண்டு கொண்டிருப்பது சீனாவே. சொல்லப்போனால் சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் முதன் முதலாக பாதிக்கப்பட்டதும் சீனா தான். அதுவும் தற்போது இரண்டாவது கட்ட அலை பரவி வருவதாகவும் கூறப்பட்டாலும், பொருளாதார ரீதியான மீட்சி நடவடிக்கைகள் விரைவில் மீண்டு வந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சீனாவுக்கு சாதகமான வளர்ச்சி
உற்பத்தி அதிகரிப்பு, நுகர்வோர் வாங்கும் திறன் அதிகரிப்பு, தேவை அதிகரிப்பு இப்படி எல்லாமே சாதகமான நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளன. மேலும் சீனாவின் முதலீடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இது இப்படி இருக்கையில் உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தாலும், அதனை விட அதிகமாகத் தான் மற்ற நாடுகளுக்கு சீனா இறக்குமதி செய்கிறது. உதாரணத்திற்கு இந்தியாவினையே எடுத்துக் கொள்ளலாம்.
சீனாவில் இருந்து இறக்குமதி அதிகம்
சீனாவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியானது குறிப்பிட்ட அளவு இருந்தாலும், இந்தியாவுக்கு சீனாவின் இறக்குமதி கணிசமான அளவு அதிகம். இப்படி எது எடுத்தாலும் சீனாவின் ராஜ்ஜியமாக இருக்கும் போது, இந்திய பொருளாதாரம் எப்படித் தான் சீனாவினை விட மிஞ்ச முடியுமோ தெரியவில்லை.
அதற்கான தெளிவான கொள்கைகளும், ஆழமான புரிதல் உணர்வுகளும் , முதலீடுகளும் வேண்டும். அபப்டி இருந்தால் மட்டுமே இந்தியா வருங்காலத்தில் ஆவது சீனாவை மிஞ்சும் எனலாம்.