ஒரு நிறுவனம் சரிவர இயங்கவும், லாபம் அதிகரிக்கவும் அங்கிருக்கும் அனைத்து டீம்களின் உதவியும் தேவை. நிறுவனத்தின் சார்பில் கஸ்டமரிடம் பேச வேண்டும், கஸ்டமரை பிசினஸுக்குள் இழுக்க சேல்ஸ் டீம் முற்பட வேண்டும். அவர் இணைந்த பிறகு சிறந்த சப்போர்ட்டை வழங்க வேண்டும். இப்படி பல டீம்களும் சேர்ந்து வேலை பார்த்தால் தான் அந்த குறிப்பிட்ட கஸ்டமரை தக்க வைக்க முடியும். அதோடு நீண்ட காலம் நல்ல சர்வீஸ் கிடைக்கும் பட்சத்தில் அவரும் பிற நிறுவனங்களை நாட மாட்டார். இது அந்தந்த நிறுவனங்களின் கையில் தான் உள்ளது.
இப்படி பல டீம்கள் செய்யும் வேலையை ஒன்றிணைத்தால் எப்படி இருக்கும்? தொடர்ந்து வாடிக்கையாளர் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லவா? அதைத்தான் தற்போது காக்னிசன்ட் நிறுவனம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் காக்னிசன்ட், தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் அன்றாட ஈ-மெயில்கள், ஆன்லைன் மீட்டிங் மற்றும் சாட் போன்றவற்றை ஆராய்ந்தது.
அதற்காக ஒரு AI சாஃப்ட்வேரை பயன்படுத்தியது. இந்த சாப்ட்வேர் ஊழியர்களின் எல்லா மெயில்களையும் படித்துப் பார்த்து எந்த கஸ்டமருக்கு எந்தெந்த உதவி தேவைப்படுகிறது? என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்துக் கொடுக்கிறது. இதனால் இந்த வருடத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பிசினஸ் வாய்ப்புகள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,650 கோடி மதிப்பிலான வருவாய் வாய்ப்புகளை நிறுவனம் பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனத்தின் சீப் எக்ஸிக்யூட்டிவ் ரவிக்குமார் ஒரு ஃபோரமில் பேசும்போது தெரிவித்தார்.

ஒரு நிறுவனம் கஸ்டமரை அதிகரிக்க மார்க்கெட்டிங் டீம் மற்றும் சேல்ஸ் டீமை பயன்படுத்தும். ஆனால் கஸ்டமருடன் ஒரு டீம் என்ன பேசுகிறது? என்பது மற்ற டீமுக்கு தெரியாது. கஸ்டமரும் ஒரு டீமிடம் தனக்கு இந்த தேவை இருக்கிறது என கூறுவார். மற்றொரு டீமிடம் வேறு ஒரு விஷயத்தை கூறவும் வாய்ப்புள்ளது. ஆனால் இதையெல்லாம் ஒன்று சேர்த்தால் உண்மையிலேயே அவருக்கு என்ன தேவை என்பது கிடைத்துவிடும்.
இதைத்தான் தங்கள் பிசினஸுக்கு ஏதுவாக மாற்றியுள்ளது காக்னிசன்ட் நிறுவனம். அதற்காக காண்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகன், ரோகன் மூர்த்தி தொடங்கிய ஒர்க் ஃபேப்ரிக் நிறுவனத்துடன் காக்னிசன்ட் கைக்கோர்த்துள்ளது.இதன் மூலம் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மெட்டா நிறுவனமும் ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி வருகிறது. ஊழியர்களின் மவுஸ் அசைவுகள் மற்றும் கீபோர்டு கிளிக்குகள் போன்றவற்றையெல்லாம் கவனித்து எதிர்காலத்தில் அலுவலக வேலைகளை ஊழியர்களுக்கு பதிலாக AI ஏஜெண்டுகளை வைத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.
இப்படியே போனால் மனிதர்களை ஏஐ மிஞ்சுவிடும் சூழல் தான் நிலவுகிறது. டிசிஎஸ் நிறுவனமும் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் ஊழியர்களுக்கு இணையான ஏஐ ஏஜெண்டுகளை பயன்படுத்த இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்து இருந்தார். ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி வசதியானதாக பார்க்கப்பட்டாலும் மறுபுறம் இது வேலை வாய்ப்புகளை அழித்து விடுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications