இந்திய மக்கள் அனைவருக்கும் சிலிண்டர் இணைப்புகள் மத்திய மாநில அரசுகள் அளித்து வருவது எந்த அளவிற்குப் பாராட்டிப் பேசப்படுகிறதோ, நேர் எதிராக ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது சிலிண்டர் விலை.
சர்வதேச சந்தை விலை படி இந்தியாவில் எரிவாயு, எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு கூறினாலும் இதன் மீது விதிக்கப்படும் வரி மக்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது. உதாரணமாகப் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் விற்பனை விலையில் சுமார் 52 சதவீதம் வரியாக மட்டுமே மத்திய மாநில அரசுகள் பெறுகிறது.
கிட்டத்தட்ட இதே நிலை தான் சமையல் எரிவாயுவிற்கும், சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எல்பிஜி சிலிண்டர்
இந்தியாவில் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எல்பிஐ சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரிக்கப்படாமல் இருந்த நிலையில் ஜூலை மாதம் விலையை உயர்த்தப்பட்டு உள்ளது.
எல்பிஜி விலை உயர்வு
கச்சா எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை 25.50 ரூபாய் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய விலை ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்
இதன் மூலம் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்டு எல்பிஜி சிலிண்டர் விலை 809 ரூபாய் விலையில் இருந்து 834.50 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது, இதுவே தமிழ்நாட்டில் 825.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது 850.50 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
மக்கள் பெரும் சுமை
இதனால் பெரும் பணக்காரர்கள் முதல் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலை 25.50 ரூபாய் அதிகரித்துள்ளது. 25 ரூபாய் மட்டுமே உயர்ந்திருந்தாலும், கொரோனா காலத்தில் வேலை இழந்து, வருமானத்தை இழந்து தவிக்கும் பல கோடி குடும்பங்களுக்கு 850 ரூபாய் என்பது பெரும் சுமை தான்.
19 கிலோ எல்பிஜி சிலிண்டர்
வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை 25.50 ரூபாய் அதிகரித்து 850.50 ரூபாய் அதிகரித்துள்ள வேளையில், ஹோட்டல் மற்றும் இதர வர்த்தகத் தளங்களில் பயன்படுத்தும் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை 84.50 ரூபாய் அதிகரித்து 16,87.50 ரூபாய்க்கு உயர்ந்து உள்ளது.
ஹோட்டல் உணவு விலை
வர்த்தகச் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ள காரணத்தால் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஹோட்டல்களில் உணவு விலை அதிகரிப்பு அனைத்து தரப்பையும் பாதிக்கும். பொதுவாக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை
மேலும் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.
இதன் மூலம் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.80 ரூபாய்க்கும், டீசல் விலை 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த விலை உயர்வில் கட்டாயம் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டும்.
மக்கள் பாவம்
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வை பார்க்கும் போது அரசு கொடுத்த இலவச சிலிண்டர் இணைப்பை மக்கள் திரும்பக் கொடுக்கும் காலம் வந்துவிடும், நாட்டு மக்கள் அனைவரும் திரும்பவும் விறகு அடுப்பிற்குச் செல்லும் முன் எல்பிஜி சிலிண்டர் மீதான வரியை குறைப்பது அல்லது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது சரியானதாக இருக்கும்.