பொதுவாக காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் செய்திகள் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தினசரி காலை எழுந்ததும் தனது மொபைல் போனில் செய்திகளை படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால் தினசரி காலையில் பார்க்கும் செய்திகள் பெரும்பாலும் மோசமான செய்திகளாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் நம்மை போலவே தினசரி செய்திகளை படிப்பதுடன் தனது நாளை ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தினமும் காலையில் தான் தொலைபேசியில் செய்திகளை பார்த்து தான் அந்த நாளை தொடங்குவதாகவும் ஆனால் பெரும்பாலும் நான் பார்ப்பது கெட்ட செய்திகள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
காமெடி
மக்கள் என்னிடம் நல்ல செய்திகளை சொல்ல வேண்டாமென்று ஒதுக்குகிறார்களா? அல்லது எனது கண்ணில் மட்டும்தான் கெட்ட செய்திகள் மட்டும் தெரிகிறதா என்று அவர் காமெடியுடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
செய்திகள்
38 வயதான மார்க் ஜுக்கர்பெர்க் காலை எழுந்தவுடன் மோசமான செய்திகளை படிப்பதாகவும், இந்த வகை செய்திகளை படிக்கும்போது வயிற்றில் ஓங்கி யாரோ குத்துவதை போல் உணர்வதாகவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக பெரும் சவால்களை சந்தித்து வருகிறார் என்பதும் அவரது நிறுவனத்தின் செய்திகளும் பெரும்பாலும் நல்ல செய்திகளாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீட்டமைத்து கொள்ளும் திறன்
மேலும் மோசமான செய்திகளினால் ஏற்படும் அழுத்தத்தை மார்க் ஜுக்கர்பெர்க் எவ்வாறு சமாளிக்கிறார்? என்பதையும் அவர் அந்த பேட்டியில் விளக்கியுள்ளார். நான் மோசமான செய்திகளை படிக்கும்போது என்னை நானே மீட்டமைத்து கொள்ளும் திறனை ஏற்படுத்தி கொள்கிறேன். மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க நான் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உடல் ரீதியான பயிற்சி செய்து என்னை மீட்டமைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
எதிர்மறை விளைவுகள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பல்வேறு சோதனைகளை சந்தித்தது. மார்க் ஜுக்கர்பெர்க் ஒருசில மாற்றங்கள் செய்ததை அடுத்து அந்த மாற்றங்கள் எதிர்மறையான விளைவுகளையே கொடுத்தது என்றும் கூறப்பட்டு வருகிறது.
மெட்டா பங்குகள்
இந்த ஆண்டு பிப்ரவரியில், மெட்டா பங்குகள் 26% சரிந்தது என்பதும் இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு $200 பில்லியனுக்கும் மேலாக குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை சரிவு காரணமாக ஜுக்கர்பெர்க்கின் சொந்த சொத்து $29 பில்லியன் என குறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.