உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பின்பு உற்பத்தி நிறுவனங்கள் தவிர சேவைத்துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது ஹைப்ரிட் வேலை கலாச்சாரத்தைத் தனது அமலாக்கம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தே வர்த்தகத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹைப்ரிட் கலாச்சாரத்தை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் இந்திய நிறுவனங்கள் முன்னோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அலுவலகங்களைப் பிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சுவிஸ் நாட்டின் IWG நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை செய்துள்ளது.
IWG நிறுவனம்
சுவிஸ் நாட்டின் IWG நிறுவனம் ஸ்பேசஸ், ரீகஸ் எனப் பல பிராண்டுகளில் அலுவலகங்களை வாடகைக்கும் குத்தகைக்கும் உலகின் பல நாடுகளில் அளித்து வருகிறது. இந்நிலையில் IWG தற்போது செய்துள்ள முக்கியமான ஆய்வில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்று குறைந்த பின்பும் வேலைவாய்ப்பு சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இதே வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து ஊழியர்களை வீட்டில் வைத்த வேலை வாங்குகிறது நிறுவனங்கள்.
ஹைப்ரிட் வொர்கிங் மாடல்
பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஹைப்ரிட் வொர்கிங் மாடலை நடைமுறை செய்துள்ளது. இது ஒருபக்கம் ஊழியர்களுக்கு நன்மையாக இருந்தாலும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக உள்ளது. எப்படித் தெரியுமா.. வாங்க பார்ப்போம்.
IWG ஆய்வு
IWG செய்த ஆய்வில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதாலும், ஹைப்ரிட் மாடல் நடைமுறைப்படுத்தி உள்ள காரணத்தாலும், பல நிறுவனங்கள் பெரிய அலுவலகத்தை மூடிவிட்டு சிறிய அலுவலகத்தை மாறியுள்ளது. ஆயினும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் நிறுவனங்களுக்கு அதிகப்படியான பணத்தைச் சேமிக்கிறது.
8,00,570.21 ரூபாய் சேமிப்பு
இப்படி IWG-யின் ஆய்வில் ஒரு பிரிட்டன் நிறுவனம் ஹைப்ரிட் மாடல் நடைமுறைப்படுத்தியதன் வாயிலாக அலுவலக வாடகை, ஏசி அல்லது ஹீட்டிங், உதவி ஊழியர்கள் போன்றவற்றின் வாயிலாக ஒரு ஊழியருக்கு சுமார் 8100 பவுண்ட் பணத்தைச் சேமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8,00,570.21 ரூபாய்.
வங்கி முதல் சேவை நிறுவனம் வரை
IWG செய்த ஆய்வில் 2 லட்சம் ஊழியர்கள் கொண்ட முன்னணி வங்கி ஹைப்ரிட் மாடல் மூலம் 1.6 பில்லியன் பவுண்ட், 20000 ஊழியர்கள் கொண்ட டெக் நிறுவனம் 160 மில்லியன் பவுண்ட், 2000 ஊழியர்கள் பணியாற்றும் சேவை நிறுவனம் 16 மில்லியன் பவுண்ட் சேமிப்பதாக அறிவித்துள்ளது.
ஊழியர்களுக்குச் சேமிப்பு
இதேபோல் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் வாயிலாகச் சுமார் 328 பவுண்ட் அளவிலான பணத்தை ஒவ்வொரு மாதமும் சேமித்து வருவதாக Confused.com ஆய்வுகள் கூறுகிறது.
ஊழியர்கள் ராஜினாமா
இந்தியாவில் இருப்பதைப் போலவே IWG செய்த ஆய்வில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தால் 49 சதவீத ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
இனி இதுதான் நார்மல்
ஒரு ஊழியருக்கு 8 லட்சம் சேமிக்க முடியுமானால் கட்டாயம் நிறுவனங்கள் இனி ஊழியர்களை முழுமையாக அலுவலகத்திற்கு அழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு தான். இந்த 800000 ரூபாய் சேமிப்பு அளவீடு இந்தியாவில் சில சதவீதம் மாறினாலும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் தான்.