வங்கிகளில் வழங்கப்படும் லோன்களையே பெரும்பாலான குடும்பங்கள் நம்பி இருக்கின்றன. ஹோம் லோன், எஜுகேஷன் லோன், பர்சனல் லோன் என பலவகையான லோன்கள் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் லோன்களுக்கு முதலில் வங்கிகள் பார்ப்பது கிரெடிட் ஸ்கோரை தான். இந்த ஒரு ஸ்கோர் சிறப்பாக இருந்து விட்டால் போதும்.. உடனடியாக லோனுக்கு அப்ரூவல் கிடைத்துவிடும். இந்த பதிவில் ஒருவருக்கு எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருந்தால் லோன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
லோன் பெற்று அதை அடைப்பதற்கு ஒரு சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அந்த லோனை பெறுவதே சிலருக்கு சவாலாய் இருக்கிறது. காரணம் ஸ்கோர் சரியாக இல்லை என்று கூறி வங்கிகள் லோன் அப்ளிகேஷனை நிராகரித்து விடுகின்றன. நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் எனில்.. இந்த பதிவு உங்களுக்கு தான்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 இலக்கங்களைக் கொண்ட ஒரு நம்பர். இந்த நம்பர் தனிநபரின் நிதிநிலை அறிக்கை போன்றது. அதாவது நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கிவிட்டு எப்படி ஈஎம்ஐ செலுத்தி இருக்கிறீர்கள்?, சரியான நேரத்தில் கடனை அடைத்தீர்களா?, ஏதேனும் ஈஎம்ஐ தவணையை தவறவிட்டீர்களா? என்பதையெல்லாம் இந்த ஒரு ஸ்கோரை வைத்தே வங்கிகள் தெரிந்து கொண்டு விடும்.

இதற்காக நாட்டின் நான்கு நிறுவனங்களுடன் வங்கிகள் டையப் வைத்திருக்கின்றன. CRIF High Mark, Experian, Equifax மற்றும் TransUnion CIBIL ஆகிய நிறுவனங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை வங்கிகளுக்கு தெரிவிக்கிறது. பொதுவாக இந்த கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரையில் இருக்கும்.
உங்களுடைய ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருத்தில் கொள்ளும். அதுவே 600-க்கு குறைவாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் பிரச்சினை. ஆனால் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைந்த ஸ்கோர் இருந்தாலும் கடன் வழங்குகின்றன. ஆனால் அதற்கு நீங்கள் ஒரு கூட்டு விண்ணப்பதாரரை கூட்டிச் செல்ல வேண்டும்.
அதுவும் இன்றைய சூழலில் ஜாமீன் கையெழுத்து போட பெரும்பாலானோர் தயாராக இருப்பதில்லை. இப்படி பல விஷயங்கள் இதில் இருக்கிறது. எனவே கடன் பெற வேண்டுமானால் கண்டிப்பாக இந்த ஸ்கோர் முக்கியம். மேலும் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவருக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும். ஸ்கோர் இருந்தால் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
முக்கியமாக இந்த ஸ்கோரை வங்கிகள் சரி பார்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? கடன் பெறுபவர் உண்மையிலேயே திருப்பி செலுத்தும் திறன் கொண்டவரா? என்பதை தீர்மானிப்பதற்காகத்தான். எனவே எதிர்காலத்தில் கடன் பெற திட்டமிட்டிருந்தால் தற்போது நீங்கள் வாங்கி இருக்கும் கடனை சரியாக செலுத்த முயற்சி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications