நம் நாட்டு மக்களையும் தங்கத்தையும் எப்பொழுதுமே பிரிக்க முடியாது. தங்க விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை பற்றி கவலைப்படாமல் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இந்தியர்கள். அப்படி இருக்கயில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும் அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரே இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கும் நிலையில், ஏற்கனவே தங்கம் வாங்கி வைத்தவர்கள் என்ன செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள்?
அதைப்பற்றி பயப்படத் தேவையில்லை. இனிமேல் தங்கம் வாங்க வேண்டாம் என்ற வேண்டுகோளை தான் பிரதமர் விடுத்துள்ளாரே தவிர.. ஏற்கனவே தங்கம் வாங்கியவர்களை பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் வருமான வரித்துறை ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சில வரம்புகளை விதித்துள்ளது.
இந்தியாவின் வசிக்கும் ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?: இந்தியாவில் உள்ள நபர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு சட்டரீதியான உச்சவரம்பு இல்லை. ஆனால் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) 1994-ஆம் ஆண்டு, மே 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி வருமான வரித்துறையினர் உங்கள் வீட்டிற்கு சோதனை செய்ய வரும் போது கீழ்காணும் வரம்புகளை மீறி உங்களிடம் தங்கம் இருந்தால், அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
திருமணமான பெண்கள் 500 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம். அதாவது 62.5 சவரன் வரை வைத்திருக்க முடியும். இப்படி வைத்திருக்கும் பட்சத்தில் வரி துறையினர் உங்களிடம் அதை கைப்பற்றவோ, பறிமுதல் செய்யவோ கூடாது
திருமணமாகாத பெண்கள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பு 250 கிராம். சுமார் 31 சவரன் வரை திருமணமாகாத பெண்கள் வைத்திருக்கலாம். அதே போல ஆண்களுக்கான வரம்பு 100 கிராம். 12.5 சவரன் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம். திருமணமான ஆணாக இருந்தாலும் சரி திருமணம் ஆகாதவர் ஆக இருந்தாலும் சரி இதுதான் வரம்பு.
மேலே கூறப்பட்டுள்ள வரம்பிற்குள் தங்கம் வைத்திருந்தால் வருமான வரி அதிகாரிகள் நீங்கள் முறையான வருமான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என்றாலும், உங்களிடம் பறிமுதல் செய்ய மாட்டார்கள். ஆனால் மேற்கொண்ட அளவைவிட அதிகமாக நகை இருக்கும்போது அதற்கு உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்போது வரி துறையினர் உங்களுடைய நகைகளை பறிமுதல் செய்வார்கள்?: வரித் துறையினரின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உங்களிடம் தங்கம் இருந்தால் பறிமுதல் செய்ய முடியாது. அதாவது வரி செலுத்துவோர் எந்த வருமானத்தின் மூலம் தங்கத்தை வாங்கியிருக்கிறார் என்பதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
அதேபோல உங்கள் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு மேலே நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கூடுதல் தங்கம் இருந்தாலும் அதை பறிமுதல் செய்யாமல் இருக்க சோதனை நடத்தும் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
மேலே கூறப்பட்டுள்ள வரம்பிற்கு அதிகமாக தங்கத்தை வைத்திருக்கிறீர்கள். ஆனால் தங்கம் வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரத்தை சமர்ப்பிக்கிறீர்கள் என்றால் எந்த வித உச்ச வரமும் இன்றி வைத்திருக்கலாம். இந்த சட்ட விதிகள் அனைத்தும் தங்க நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே பொருந்தும். தங்கக் காயின்கள், தங்கபார்கள், வைரங்கள் மற்றும் பிற கற்கள் பதித்த நகைகளுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது.
ஒருவேளை தங்கம் வைத்திருப்பவர் கூறும் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றாலோ, தங்கம் வைத்திருப்பவர் உரிய விளக்கத்தை வழங்கத் தவறினாலோ அத்தகைய தங்கத்தின் மீது 60 சதவீதம் வரி விதிக்கப்படும். இதோடு கூடுதலாக 25% சர்சர்ஜ், 4% செஸ் கட்டணம் ஆகியவையும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் வரி தொகைக்கு அதிகமாக 10 சதவீத அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications