இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவரிடமும் ஒரு வங்கி கணக்காவது இருக்கிறது. வங்கிகளுக்கு சென்று பரிவர்த்தனை செய்த காலம் மாறி தற்போது யூபிஐ மற்றும் ஏடிஎம் கார்டுகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சேமிப்பு கணக்கில் பணம் இருந்தால் தான் ஏடிஎம் மற்றும் யூபிஐ வாயிலாக பணத்தை எடுக்க முடியும். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பலருக்கு அதில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. இதற்கு நிபுணர்கள் சில ஃபார்முலாக்களை வகுத்துள்ளனர். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சேவிங்ஸ் அக்கவுண்ட் என்று சொல்லப்படுகிற சேமிப்பு கணக்கில் ஓரளவுக்கு பணத்தை டெபாசிட் செய்து வைக்கலாம். இதன் முக்கிய வசதியே அதன் லிக்விடிட்டி தான். தேவைப்படும் நேரங்களில் நீங்கள் பணத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் அக்கவுண்டில் உள்ள தொகைக்கு அந்தந்த வங்கியை பொறுத்து 3 முதல் 4 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே பிற்கால செலவுக்காக சேமிப்பவர்கள், அவசரத் தேவைக்காக சேமிப்பவர்களுக்கு சேமிப்பு கணக்கு நல்ல தேர்வு. ஆனால் அதிக அளவில் பணம் வைத்திருந்தால் அதை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதற்கு பதிலாக வேறு சில இடங்களில் வைக்கலாம்.
எவ்வளவு தொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்?: பொதுவாக சேமிப்பு கணக்கில் போடப்படும் பணத்திற்கு அதிக ரிட்டன்ஸ் கிடைப்பதில்லை. எனவே அவசரத்திற்கு எடுக்கும் அளவிற்கு பணத்தை வைத்திருந்தால் போதுமானது.

50/30/20 ஃபார்முலா: முதலில் இருக்கும் 50 என்பது உங்களுடைய தேவையை குறிக்கிறது. உதாரணமாக வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டு வாடகை, மாதாந்திர ஈஎம்ஐ, எலெக்ட்ரிசிட்டி கட்டணம், மளிகை பொருட்கள், போக்குவரத்து செலவுகள் போன்றவை இதில் அடங்கும். 30 என்பது விருப்பச் செலவுகளை குறிக்கிறது. வெளியில் சென்று சாப்பிடுதல், பொழுதுபோக்கு செலவுகள், ஷாப்பிங், சுற்றுலா போன்ற உங்களுடைய தனிப்பட்ட விருப்பச் செலவுகள் அனைத்தும் இதில் அடங்கும். மீதம் இருக்கும் 20 என்பது சேமிப்பை குறிக்கிறது. அதாவது உங்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தை கண்டிப்பாக முதலீடு செய்தாக வேண்டும்.
நிதி நிபுணர்களின் கூற்றுப்படி உங்களுடைய வாழ்க்கைச் செலவில் 1 முதல் 2 மாத தொகையை மட்டும் சேமிப்பு கணக்கில் வைத்திருந்தால் போதுமானது. ஏனெனில் நாளுக்கு நாள் பணவீக்க விகிதம் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வழங்கப்படும் வட்டியை விட அதிகமாகி வருகிறது.
இதனால் சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே குறைந்த வட்டி தரும் கணக்கில் பணத்தை வைக்காமல் அதற்கு பதிலாக வேறு இடங்களில் முதலீடு செய்து கூட்டு வட்டி மூலம் வருமானத்தை பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரிஸ்க் அதிகம் என்று பயப்படும் முதலீட்டாளர்கள் பிற அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்து கூட்டு வட்டியின் மூலம் வருமானம் பெறலாம்.
சேமிப்பு கணக்கில் ரூ.1 கோடி வைத்திருக்கலாமா?: சிலருக்கு சேமிப்பு கணக்கில் அதிக அளவிலான தொகை வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் வரும். ஒவ்வொரு நிதியாண்டும் 10 லட்சம் வரையிலான பணப்பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நீங்கள் டெபாசிட் செய்திருந்தால் வங்கி உங்களுடைய விவரங்களை வருமானவரித்துறைக்கு வழங்கி விடும்.
மேலும் ஓராண்டில் சேவிங்ஸ் அக்கவுண்ட் கணக்கிற்கு கிடைக்கும் வட்டியில் ரூ.10,000-த்திற்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்படுகிறது. அதைத் தாண்டி உங்களுக்கு வட்டி கிடைத்தால் அது உங்களுடைய தனிப்பட்ட வருமானமாக கருதப்படும். அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். எனவே அதிகமான தொகை இருந்தால் அதை சேமிப்பு கணக்கில் வைப்பதற்கு பதிலாக பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications
