முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர், ஆசியாவின் டாப் பணக்காரர், உலக பணக்காரர்கள் பட்டியலில் 21-வது இடம். இவர் சொத்து மதிப்பு மட்டும் இன்றைய தேதிக்கு 52.7 பில்லியன் டாலர்.
இந்திய ரூபாய் மதிப்பில் 3,95,250 கோடி ரூபாய். இவர் நினைத்தால், இன்னொரு ஜியோ கம்பெனியை, தனியாக அவர் சொந்தக் காசில் நடத்தலாம்.
இந்த பெரும் பணக்காரர், வரும் மார்ச் 2021-க்குள், தன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை, கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொல்லி இருந்தார்.
செயல்
சொன்ன நொடியில் இருந்து, முகேஷ் அம்பானி, அந்த வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார் என்பதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது. முதலில் ரிலையன்ஸ் கம்பெனியின் கடன் விவரங்களைப் பார்த்துவிடுவோம். அதன் பின், இதுவரை எவ்வளவு பணம் திரட்டி இருக்கிறார் அல்லது திரட்ட இருக்கிறார் என விரிவாகப் பார்ப்போம்.
கடன் அளவு
ரிலையன்ஸ் கம்பெனி சுமாராக 5.4 லட்சம் கோடி ரூபாயை பல வியாபாரங்களில் முதலீடு செய்தது. அதிலும் குரிப்பாக 3.5 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப் படி, ரிலையன்ஸின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய். ஆக மீதி இருக்கும் 1.61 லட்சம் கோடி ரூபாய் தான் நிகர கடன்.
மார்ச் 2021
இந்த நிகர கடனைத் தான், மார்ச் 2021-க்குள், முகேஷ் அம்பானி முழுமையாக காலி செய்ய இவ்வளவு உழைத்துக் கொண்டு இருக்கிறார். சரி இந்த 1.61 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் இதுவரை திரட்டி இருக்கிறார்..? இதோ பட்டியல்.
ஃபேஸ்புக், சில்வர் லேக்
ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 % பங்குகளை, ஃபேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாயைக் கொட்டி வாங்கிக் கொண்டது. அதோடு சில்வர் லேக் என்கிற நிறுவனமும் 5,655 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தது. ஆக மொத்தம் 49,229 கோடி ரூபாயை திரட்டி விட்டார்.
அடுத்த செட்
அதே போல விஸ்டா ஈக்விட்டி என்கிற கம்பெனி, ரிலையன்ஸ் ஜியோவில் 11,367 கோடி ரூபாயை முதலீடு செய்தது. அதனைத் தொடர்ந்து ஜெனரல் அட்லாண்டிக் என்கிற நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் சுமாராக 6,600 கோடி ரூபாய் முதலீடுச் செய்து இருக்கிறது ஆக மொத்தம் 17,967 கோடி ரூபாய் திரட்டி விட்டார்.
திட்டம் தாமதம்
இந்த டீல்களுக்கு முன்பே சவுதி அராம்கோ நிறுவனத்திடம் oil to chemical பிரிவின் 20 % பங்குகளை விற்க பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த டீல் முடிந்தால் ரிலையன்ஸுக்கு சுமாராக 1.125 லட்சம் கோடி ரூபாய் கைக்கு வருமாம். கொரோனாவால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகிக் கொண்டு இருக்கிறதாம். மொத்தம் 1,12,500 கோடி ரூபாய்க்கு டீல் காத்துக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் சில்லறை வணிகம்
இது போக ரிலையன்ஸ் எரிபொருள் வியாபாரத்தில், ஒரு கணிசமான பங்கை BP Plc என்கிற கம்பெனிக்கு விற்பதால் மட்டும் சுமாராக 7,000 கோடி ரூபாய் வர இருக்கிறதாம். அது போக இன்று வெளியாகி இருக்கும் உரிமைப் பங்குகள் வழியாக 53,125 கோடி ரூபாய் திரட்ட இருக்கிறது ரிலையன்ஸ். மொத்தம் 60,125 கோடி ரூபாய்.
கடன் காலி
ஆக 49,229 + 17,967 + 1,12,500 + 60,125 = 2.39 லட்சம் கோடி ரூபாயை முகேஷ் அம்பானி திரட்டி முடிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆக 3.36 லட்சம் கோடி ரூபாய் கடனில் 2.39 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டால் பாக்கி சுமாராக 97,000 கோடி ரூபாய் தான் இருக்கும், அதற்கு நிகராக ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடியை வைத்து சமாளித்துக் கொள்ளலாம்.
உறுதி
ஆக கூடிய விரைவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி, கடன் இல்லாத கம்பெனியாக, முகேஷ் அம்பானி சொன்னது போலவே உருவாகும். இந்த நம்பிக்கையில் தான், இன்று ரிலையன்ஸ் பங்குகள் சுமாராக 1.75 % ஏற்றத்தில் 1,435 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.