எல்லோருக்குமே சொந்தமாக வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் குடும்பசூழல், வறுமை என பலவும் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எனினும் எந்த தடையாக இருந்தாலும் அதனை உடைத்து, விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் தான் இந்த உலகில் நம்மை நாம் தனித்துவமாக காட்டிக் கொள்ள முடியும். இந்த மாபெரும் சக்திகள் இருந்தாலே நம்மால் எதனையும் சாதிக்க முடியும்.
அதற்கு சிறந்த உதாரணம் தான் கோயமுத்தூரை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரிஷி வசந்த்.
விவசாயத்துறையில் சாதனை
சிறு வயதில் இருந்தே விவசாயத்தை கவனித்து வந்த, தன் தந்தையின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்த வசந்த். தற்போது விவசாயத் துறையிலேயே தனது தந்தையின் துணையுடன், தந்தையின் வணிகத்தில் தற்போது புதுமைகளை புகுத்தி வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றார். அவர் கடந்த வந்த பாதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
தவறு செய்யுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்
தவறு செய்யுங்கள். அப்போது தான் வணிகத்தினை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். முதலில் சிறிய அளவில் ஆராய்ந்து பாருங்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் ஆர்வமும், புதுமையும் இருந்தாலே சாதிக்க முடியும். அதனை பற்றிய ஆழமான புரிதல் இருந்தால் போதும் என்கிறார் வசந்த்.
கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ்
எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தினருடன் கலந்து ஆலோசியுங்கள். அவர்களின் துணை இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும். இந்தியாவிலேயே தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை முதல் முறையாக உருவாக்கியது கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் தான். இப்படி 100க்கும் மேற்பட்ட விவசாய கருவிகளை தயாரித்து இந்தியா முழுவதும், 30 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றார்.
என்னென்ன சவால்கள்
ஒரு பொருளை உற்பத்தி செய்வதைக் காட்டிலும், அதனை மக்களிடம் சேர்ப்பது என்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சவால்களுக்கு மத்தியில் புதுமைகளை புகுத்தி அதனை மக்களிடம் சேர்ப்பது என்பது இன்னும் சவாலாக இருந்ததாகவும் கூறுகின்றார். இப்படி சவால்களுக்கும் மத்தியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு தான் மிக உதவிகரமாக இருந்ததாகவும் கூறுகிறார்.
விவசாயிகள் தான் எங்கள் கடவுள்
விவசாயிகள் தான் எங்கள் கடவுள் என கூறும் வசந்த், அவர்களின் கஷ்டத்தினை போக்க எங்களது இயந்திரங்கள் உதவிகரமாக இருக்கும். அதனை வைத்து வருமானமும் ஈட்ட முடியும். மொத்தத்தில் இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவும். ஒரு பொருள் உங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படாமல், அதனை மதிப்புகூட்டு பொருளாக மாற்றுங்கள் என கூறுகிறார். இயந்திரங்கள் வாங்கும் விவசாயிகளிடமும் இதனை விளக்கம் கொடுத்து வருகின்றார்.
மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுங்கள்
உங்களிடம் இருக்கும் விவசாய இயந்திரத்தினை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுங்கள். அதனை அடுத்தவரின் தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள். அதுவே உங்கள் வருமானமாக மாறும். இப்படி இயந்திரத்தினை வாங்க ஊக்குவிப்பதோடு, அவற்றை வைத்து தொழில் முனைவோராக மாற்ற உதவுவதாகவும் கூறுகிறார்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மேலும் ஒவ்வொருவரும் விவசாயம் கற்றுக் கொள்ள வேண்டும். விவசாயத்தில் ஈடுபட வேண்டும். குடும்பத்தினரையும் அதனை ஊக்குவிக்க வேண்டும். விவசாயம் குறித்து விழிப்புணர்வு முகாமினை கல்லூரியில் வழங்கவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறுகிறார்.
என்னென்ன இயந்திரங்கள்?
தேங்காய் உரிக்கும் மெஷின், பால் கறக்கும் மெஷின், நெல் அடிக்கும் இயந்திரம், வைக்கோல் வெட்டும் இயந்திரம், பால் மொத்தமாக கூலிங் செய்யும் இயந்திரம், தென்னை மரம் ஏறும் இயந்திரம், டிரில்லர், ரொட்டாவெட்டர், மருந்து தெளிக்கும் தெளிப்பான்கள், ஜூசர் மெஷினர், மாவு அரைக்கும் மெஷின் என பல இயந்திரங்களை கோவை கிளாசிக் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி
இப்படி விவசாயம் சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை தயாரித்து, உள்நாட்டிலும், ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்தியாவில் முக்கியமாக தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அண்டை நாடுகளில் ஸ்ரீ லங்கா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சூடான், எகிப்து, உகாண்டா, பிரெஞ்ச், ஹீவாய், குவாத்தமாலா நகரம், செனகல், கேஎஸ்ஏ, ஓமன், கானா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.
என்னென்ன வணிகம்
மொத்த வியாபாரம், ஏற்றுமதி, சப்ளையர், சேவை வழங்குனர், இறக்குமதியாளார், வணிகர், சில்லறை விற்பனையாளார் என உற்பத்தியோடு பல வணிகத்தினையும் செய்து வருகின்றார். ஆக உற்பத்தியோடு பல்வேறு வகையில் வணிகத்தினை மேம்படுத்தி வரும் வசந்த், இன்று இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் எனலாம். ஏனெனில் 23 வயதில் இன்று பல கோடி மதிப்பிலான வணிகத்தினை வெற்றிகரமாக செய்து வருகின்றார்.
விவசாயத்தினை ஊக்குவியுங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது நண்பர், குழந்தைகள் என அனைவருக்கும், விவசாயம் சம்பந்தமான விதைகள், பொருட்கள் என விவசாயம் சார்ந்த பொருட்களை பரிசாக கொடுங்கள். அதன் மூலம் விவசாயத்தினை ஊக்குவியுங்கள். நீங்கள் எந்த வணிகம் செய்தாலும் அதில் உங்களின் தனித்துவத்தினை கொடுங்கள். அதன் மூலம் தான் உங்களால் தனித்து நிற்க முடியும்.
தனித்துவமாக இருங்கள்
எல்லோரும் செய்வதைபோல நீங்களும் செய்தால் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க முடியும். ஆக தனித்து இருங்கள். புதுமையை செலுத்துங்கள் உங்களால் வெற்றி பெறமுடியும் என்கிறார். உண்மையில் இன்று வணிகத்தில் சாதித்தவர்கள் பலகோடி முதலீடு செய்து சாதித்தவர்கள் கிடையாது. தங்களது தன்னம்பிக்கையால் உழைத்து முன்னேறியவர்கள் தான். ஆக உங்களது தடையை உடைத்து முன்னேறுங்கள்.