இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் காரணத்தால் போக்குவரத்தைச் சார்ந்து இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது, இதில் சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பால் உட்பட அனைத்து அடங்கும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 26.34 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில் மக்களிடம் எப்படி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான விலை வித்தியாசத்திற்கு என்ன காரணம்.
இந்தியன் ஆயில்
நாட்டின் முன்னணி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனமாகத் திகழும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்றைய விலை படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 26.34 ரூபாய்.
ரீடைல் டீலர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு லிட்டருக்கு சுமார் 37 பைசா சரக்குச் சுமை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் டீலர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படும் போது ஒரு லிட்டர் பெட்ரோல் 26.71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீலர் கமிஷன்
இந்நிலையில் ரீடைல் விற்பனையகங்களில் அதாவது பெட்ரோல் பங்க்-களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலுக்கு டீலர்களுக்கு ஒரு லிட்டருக்கு 3.65 ரூபாய் கமிஷன் கொடுக்கப்படுகிறது.
கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி
இதைத் தொடர்ந்து 26.71 ரூபாய் மதிப்பிலான ஒரு லிட்டர் பெட்ரோல் மீது கலால் வரியாக 32.98 ரூபாயும், மதிப்புக் கூட்டு வரியாக 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீலர்களுக்குக் கொடுக்கப்படும் கமிஷன் தொகைக்கும் மதிப்பு கூட்டு வரி உண்டு.
இந்த மதிப்பு கூட்டு வரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுப்படும். பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்டு இருக்க இது முக்கியக் காரணமாக அமைகிறது.
மொத்த விலை
இதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் (அடிப்படை விலை + சரக்குச் சுமை கட்டணம்) - 26.71 ரூபாயில் இருந்து கலால் வரி, டீசல் கமிஷன், மதிப்பு கூட்டு வரி என அடுத்தடுத்த வரி விதிப்பின் காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை 82.34 ரூபாயாக உள்ளது.
இது சென்னையில் 85.31 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் முதல் முறையாகப் பெட்ரோல் விலை ரூ 91ஐ தாண்டியுள்ளது. போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.05 ஆகவும், டீசல் விலை ரூ 80.10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக வாட் வரி காரணமாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கான வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையைக் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தீர்த்து வருகிறது. இதில் பெருமளவு கச்சா எண்ணெய் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 46.79 டாலர்.
ஒரு பேரலில் 159 கச்சா எண்ணெய் இருக்கும். அப்படியிருக்கையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 3440.15 ரூபாய்.
உற்பத்தி
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு அளவிலான உற்பத்தி கிடைக்கும். இதோடு பல இணை பொருட்களும் (Petroleum byproducts) கிடைக்கும்.
இப்படியிருக்கையில் இந்தியாவில் பயன்படுத்தும் பெட்ரோல் தரத்திற்குத் தோராயமாக 50 லிட்டர் (+/- 10 லிட்டர்) கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.