இந்திய வர்த்தகச் சந்தையின் அமைப்பில் ஒரு விற்பனை பொருளின் விலையில் எரிபொருள் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
இதற்கு முக்கியமான காரணம் ஒரு பொருளின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் இருந்து உற்பத்தி பொருளை விற்பனை சந்தையில் பொருட்களை வாடிக்கையாளர்கள் கையில் கொண்டு வந்து சேர்ப்பது வரையில் அனைத்திலும் போக்குவரத்து என்பதன் வாயிலாக எரிபொருளின் பங்கு அதிகமாகவே உள்ளது.
இந்தியா
இப்படிப்பட்ட கட்டமைப்பில் இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் பெரிய அளவில் இல்லாத நிலையில் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத அளவில் 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
136 நாள்
இந்த விலை உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு 5 மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 136 நாள் எவ்விதமான விலை உயர்வையும் அறிவிக்காமல் நேற்று பல்க் டீசல் விற்பனை விலையை லிட்டருக்கு 40 ரூபாய் உயர்த்தியது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை
இன்று 137 நாட்களுக்குப் பின்பு அதாவது நவம்பர் 4, 2021ஆம் தேதிக்குப் பின்பு இன்று ரீடைல் பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு கடந்த 3 மாதத்தில் வர்த்தகச் சிலிண்டர் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வந்த நிலையில் இன்று வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
விலைவாசி உயர்வு
ஒரே நாளில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் எனச் சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும் முக்கியமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பால், காய்கறி முதல் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கும். குறிப்பாகப் பெயிண்ட், கார், பைக் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.
நுகர்வோர் சந்தை
அடுத்தச் சில வாரங்களுக்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் அனைத்து ரீடைல் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் நுகர்வோர் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்த முடியாத நிலை ஏற்படும். இதன் வாயிலாகப் பணவீக்க அளவீடுகள் உயரும்.
போக்குவரத்து நிறுவனங்கள்
மேலும் மத்திய அரசு பல்க் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 40 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில் போக்குவரத்து கட்டணமும் இனி அதிகளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் தான் மொத்தமாக டீசல் வாங்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.
சாமானிய மக்கள்
தற்போது லிட்டருக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது மூலம் போக்குவரத்துக் கட்டணம் கட்டாயம் உயரும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் சாமானிய மக்களைப் பாதிக்கும். போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் போது விற்பனை பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.