இன்றைய சூழலில் நல்ல சம்பளத்தில் ஒரு கார்ப்பரேட் வேலை கிடைத்து விடாதா? என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் நல்ல சம்பளம் தரும் வேலையை உதறித் தள்ளிவிட்டு, பல தொழில் செய்து அதில் தோல்வியைக் கண்ட ஒருவர் மீண்டும் மனம் தளராமல் பிசினஸ் தொடங்கி கோடிகளில் வருமானம் பார்த்து வருகிறார். ஆம்.. பூ வியாபாரம் தான் அவரை இவ்வளவு பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏ.சஞ்சீவ் ரெட்டி. இவர் 1995-ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தில் ப்ளானிங் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆண்டுக்கு ரூ.96,000 வரை சம்பளம் கிடைத்தது. ஆனால் பணியில் இருக்கும் போதே ஏதாவது கூடுதலாக படிக்க வேண்டும் என்று எண்ணிய சஞ்சீவ் நேஷனல் இண்டஸ்ட்ரீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் கவுன்சில் மூலமாக டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனை முடித்தார்.

அதன் பிறகு தான் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வந்தது. அதற்கு கண்டிப்பாக முதலீடு தேவைப்படும் என்பதை உணர்ந்து வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை சேமிக்கத் தொடங்கினார்.
வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்திற்காக பணிபுரிந்து சம்பளம் பெற்றுக் கொண்டே இருப்பது சஞ்சீவுக்கு பிடிக்கவில்லை. அதனால் மற்ற செலவுகள் எல்லாம் இருந்தாலும் சேமிப்பிற்கு முன்னுரிமை கொடுத்தார்.
2000-ஆம் ஆண்டில் தன்னுடைய வேலையை ரிசைன் செய்த சஞ்சீவ், முதன் முதலாக 2001-ஆம் ஆண்டு காளான் வளர்ப்பில் இறங்கினார். ஆனால் 2005-ஆம் ஆண்டில் காளான் வளர்ப்பில் நஷ்டம் ஏற்படவே மீண்டும் சில காலம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்.
2013 வரை சேமித்து 10,000 சதுர அடியில் பெரிய காளான் பண்ணை அமைத்தார். 2019-ஆம் ஆண்டில் வீசிய கடும் புயல் காரணமாக அவருடைய தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போதும் சஞ்சீவ் மனம் தளரவில்லை. புயலுக்குப் பிறகு மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவிலேயே இருந்தார். 2020-ஆம் ஆண்டு காளான் வளர்ப்பை விட்டுவிட்டு பூ வியாபாரத்தில் களமிறங்கினார்.
லக்னோவில் உள்ள நேஷனல் பொட்டானிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நமோ 108 (லட்சுமி கமல்) என்ற 108 இதழ்கள் கொண்ட தாமரை பூவை சாகுபடி செய்யத் தொடங்கினார். தான் பணியில் இருக்கும் போதே தொழில் தொடங்க ரூ. 1.8 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தார்.
அந்த சேமிப்பை இதற்கு முதலீடு செய்தார். நேஷனல் பொட்டானிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் 400 நாற்றுகளையும் 100 கிராம் விதைகளையும் வழங்கியது. முதலில் தன்னுடைய கிராமத்தில் இருக்கும் 4 குளங்களை ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்தார். உற்பத்தியை அதிகரிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்தும் 10,000 தாமரை நாற்றுகளை 50,000 ரூபாய் என்ற விலையில் வாங்கினார். அவர் வாங்கிய செடிகள் அனைத்தும் 60 முதல் 70 நாட்களுக்குள் பூக்கத் தொடங்கியது.
தற்போது சஞ்சீவ் தாமரை தோட்டங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 30,000 தாமரை மலர்கள் விளைகிறது. இவை டெல்லி, லூதியான, கொல்கத்தா மற்றும் அவர் வசிக்கும் பகுதியை சுற்றியுள்ள நகரங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மலரையும் 5 முதல் 10 ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்கிறார்.
சில சமயம் திருவிழா நாட்களில் விலை இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும். 2022-ஆம் ஆண்டில் தாமரை சாகுபடி மூலம் மட்டுமே ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டினார். முதல் முறையாக சொந்தத் தொழிலில் வெற்றி கண்டதும் சஞ்சீவ் 2023-ஆம் ஆண்டு சாமந்தி பூ சாகுபடியிலும் இறங்கினார்.
ஆப்பிரிக்கன் மேரி கோல்ட் எனப்படும் சாமந்தி பூ ரகத்தை பயிரிட்டார். அதற்காக 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். ஆரம்பத்தில் அவர் வசிக்கும் பகுதியில் நாற்றுகள் கிடைக்காததால் கொல்கத்தாவில் இருந்து இறக்குமதி செய்தார். தற்போது 4 ஏக்கர் தோட்டத்தில் ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை பூக்கள் கிடைக்கிறது.
1 கிலோ சாமந்திப் பூக்களை 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார். திருவிழா, பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கிறார். சஞ்சீவ் தனது விவசாயத்திற்கு பெரிதாக உரங்களை பயன்படுத்துவதில்லை. ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறார். பிற விவசாயிகளுக்கும் உரங்களின் பயன்பாட்டை குறைக்கும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதிலிருந்து கிடைத்த லாபத்திற்கு அப்பால் இன்னும் லாபம் பார்க்க வேண்டும் என்று எண்ணிய சஞ்சீவ் தனது மனைவி ஜெயஸ்ரீ ரெட்டியின் பெயரில் "ஹாப்பி துக்கான்" என்ற பூ விற்பனை நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய நிறுவனத்தில் இருந்து தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ரோஜா, சாமந்தி, தாமரை என 25-க்கும் மேற்பட்ட பூக்களை விற்பனை செய்து வருகிறார். அவர்களுடைய நிறுவனத்தில் 12 பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி இருக்கிறார். ஹாப்பி துக்கான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 கோடி டர்ன்ஓவர் ஈட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications
