சாதாரண நிலையில் இருக்கும் இளைஞர்கள் தங்களது கடும் உழைப்பால் மிகப் பெரிய அந்தஸ்துக்கு வரும் பல வெற்றி பயணங்களை பார்த்து இருக்கிறோம்.
அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்விக்கி டெலிவரி பாயாக இருந்து தற்போது வெப் டெவலப்பர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் வெற்றி பயணத்தை பார்ப்போம்.
இந்த வெற்றி பயணம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் உதாரணமாகவும் இருக்கும்.
டெலிவரிபாய்
பெங்களூரை சேர்ந்த ஷேக் அப்துல் சத்தார் என்ற இளைஞர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனது குடும்பத்தினரின் வறுமையைப் போக்குவதற்காகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுக்காகவும் ஸ்விக்கி உள்பட ஒருசில நிறுவனங்களில் டெலிவரிபாயாக பணிபுரிந்தார். இதில் கிடைத்த பணத்தின் மூலம் தனது செலவு போக தனது குடும்பத்திற்கும் அவர் அனுப்பி வந்தார். அதுமட்டுமின்றி ஓலா, உபேர் உள்பட ஒருசில நிறுவனங்களிலும் அவர் டிரைவராகவும் பணியாற்றினார்.
வெப் டெவலப்பிங்
இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை சந்தித்ததில், அவருடைய அறிவுரையின்படி கோட் டெவலப்பிங் படிப்பை படித்தார். மாலை 6 மணி முதல் இரவு வரை டெவலப்பிங் கோர்ஸ் படிப்புக்காக நேரத்தை ஒதுக்கிய அவர் நள்ளிரவு 12 மணி வரையிலும், அதன்பின் அதிகாலை எழுந்து வீட்டிலேயே அந்த பாடங்களின் செயல்முறைகளை இணையத்தின் மூலம் கற்று கொண்டார்.
பணி
இதனையடுத்து வெப் டெவலப்பிங் கோர்ஸ் முடித்ததும் சதாருக்கு பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. இந்த பணியில் அவருக்கு கை நிறைய சம்பளம் வந்ததை அடுத்து அவர் தனது பெற்றோர் வாங்கிய அனைத்து கடனையும் அடைத்து தனது குடும்பத்தின் நிலையை உயர்த்தினார்.
கடின உழைப்பு
இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் தனது வெற்றிப் பயணத்தை கூறியபோது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. உங்களுடைய வெற்றிப்பயணம் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் போதும் ஒரு சாதாரண நபர் கூட மிகப்பெரிய அந்தஸ்துக்கு வரலாம் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்றும் கமெண்ட் பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ளார். வெப் டெவலப்பின் துறையில் உங்களது பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் என்று பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெற்றி
ஏழையாக பிறப்பது என்பது தவறு இல்லை, ஆனால் ஏழையாக இறப்பது தான் தவறு என்று அறிஞர் ஒருவர் கூறியபடி கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, இடைவிடாத முயற்சி இருந்தால் சதாரை போல யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.