இன்றைய சூழலில் கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்வதை விட டிஜிட்டல் பேமெண்ட் தளங்களையே வசதியானதாக மக்கள் கருதுகின்றனர். சம்பளம் அக்கவுண்டுக்கு வந்துவிட்டால் போதும் ஏடிஎம் வாசலில் நின்று பணம் எடுக்காமல் QR கோடை ஸ்கேன் செய்தே பேமெண்ட் செய்கின்றனர். டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அறிமுகமானபோது அதை பயன்படுத்துவதற்கே மக்கள் தயங்கினர். ஆனால் இப்போது அப்படி இல்லை. எங்கு பார்த்தாலும்.. ஏன் பெட்டி கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்தி வருகின்றனர்.
கூகுள் பே, ஃபோன் பே போன்ற பிரபலமான பேமெண்ட் தளங்கள் இருக்கின்றன. இதில் ஃபோன் பே ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக தங்கள் ஃபோன் பே வாலட்டைப் பயன்படுத்தாமல் இருக்கும் பயனர்களுக்கு நிறுவனம் கட்டணம் விதிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை சமீபத்தில் தங்கள் இணையதளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது.
யாருக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது?: தொடர்ந்து 365 நாட்கள் தங்களுடைய போன் பே வாலட் மூலம் எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அந்த வாலட் செயலற்றதாக வகைப்படுத்தப்படும். இவ்வாறு கருதப்படும் வாலட்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் 100 ரூபாய் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும்.

ஃபோன் பே அப்ளிகேஷனை திறப்பது அல்லது யுபிஐ மூலம் பணம் அனுப்புவது வாலட் செயல்பாடாக கருதப்படாது. இன்னும் சொல்லப்போனால் சிலர் அப்ளிகேஷன் லாகின் செய்வது, யுபிஐ பரிவர்த்தனை செய்வது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, பில் கட்டணங்கள் செலுத்துவது, கிரெடிட் கார்டு லோன், இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணம் செலுத்துவதை வாலெட் ஆக்டிவிட்டியாக கருதுகின்றனர். இதுவும் வாலட் செயல்பாடும் வெவ்வேறு. உங்கள் வாலட்டை ஆக்டிவாக வைத்திருக்க போன் பே வாலட் மூலம் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
கட்டணம் எவ்வாறு வசூலிக்கப்படும்?: பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பே அந்தந்த பயனர்களுக்கு ஒரு நோட்டீஸ் வெளியிடப்படும். இந்த நோட்டீஸ் காலத்திற்குள் போன் பே வாலட் மூலம் ஒரு பரிவர்த்தனையாவது செய்து விட்டால் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன் பின் வாலட் மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாக கருதப்படும். அதிலிருந்து 365 நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் வாலட்டில் பணம் இருந்தால் 100 ரூபாய் அதிலிருந்து கழிக்கப்படும். வாலெட்டில் 100 ரூபாயை விட குறைவான தொகை இருந்தால் அதில் இருக்கும் தொகை பிடித்தம் செய்யப்பட்டு பேலன்ஸ் ஜீரோவாக மாற்றப்படும். ஆனால் இதற்காக உங்களுடைய வாலெட் கணக்கு மைனஸ் ஆகாது என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
கட்டணத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரு முறையாவது ஃபோன் பே வாலட்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யுங்கள். டிஜிட்டல் தளங்களில் இது போன்ற கட்டணங்கள் நடைமுறைக்கு வருவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஏற்கனவே 2021-ஆம் ஆண்டில் Mobikwik நிறுவனம் இன்ஆக்டிவ் வாலட்களுக்கு பராமரிப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க் குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருக்கும் வாலட்களுக்கு கட்டணம் வசூலித்தது. இதே முறையை தான் தற்போது போன் பே நிறுவனமும் பின்பற்றவுள்ளது.


Click it and Unblock the Notifications