இளமை காலத்தில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்திலாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமும்.
அதிலும் வயதான காலகட்டத்தில் யாரையும் சாராமல், குடும்ப தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. ஆக இதற்கு ஒரே வழி முன்கூட்டியே சேமிக்க தொடங்குவது தான்.
இதற்காக இன்றைய காலகட்டத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதிலும் மூத்த குடிமக்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும் கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் இன்றும் அதிகம் விரும்பப்படுவது அஞ்சலக திட்டங்கள் தான்.
பாதுகாப்பான திட்டம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். அதாவது SCSS என்ற திட்டம் தான். இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
இந்த திட்டத்தில் இணைய என்ன தகுதி?
பொதுவாக அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். இதே விஆர்எஸ் பெறுபவர்கள் 55 வயதிற்கு மேல் இணைந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். எனினும் இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
அரசின் இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் இணைய பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது, டெலிபோன் பில், பர்த் சர்டிபிகேட்/ வயது ஆதாரம், மூத்த குடிமக்கள் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களில் உங்களது கையெப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் ஒரு வைப்புத் தொகையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வைப்பு தொகை வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நபர் பல எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது. இதே ஜனவரி - மார்ச் காலாண்டில் 8.60% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 வரையில் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 9% மேலாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் தான் சற்று குறைந்துள்ளது.
SCSS திட்டத்தின் முதிர்வுகாலம்
இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தினை நீட்டிக்க நிரப்பப்பட்ட படிவம் B யினை சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அணுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் உண்டு.
இந்த திட்டத்தில் வரி சலுகை உண்டா?
மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது தான். அதோடு டிடிஎஸ்ஸூம் பிடித்தம் செய்யப்படும். வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்க வேண்டும்.
வங்கிகளிம் தொடங்கலாம்
அரசின் இந்த சேமிப்பு திட்டமானது பல முன்னணி பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. ஆக வங்கிகளிலும் இந்த சேமிப்பு திட்டத்தினை நீங்கள் பெற்று பயனடையலாம்.
உண்மையில் இதுப்போன்ற சேமிப்பு திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வயதான காலத்தில் யாரையும் சாராமல் வாழ பயன்படும்.