மோசமான இந்திய பொருளாதாரம், சர்வதேச சந்தைகளில் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மையால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
அதிலும் ஆசிய சந்தைகளில் உள்ள மோசமான நாணய மதிப்புகளில் இந்தியாவின் ரூபாயும் ஒன்று.
எனினும் இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018ம் ஆண்டில் 74.490 ரூபாய் வரை சென்று பின்னர் இறங்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் அந்த அளவுக்கு வீழ்ச்சி காணவில்லை என்றாலும் 72 ரூபாயை தாண்டி வர்த்தகமானது.
நடப்பு ஆண்டில் ரூபாய் எப்படி இருந்தது
நடப்பு ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 72.412 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டது. இதே அதிகபட்சமாக கீழே 68.280 ரூபாய் வரை சென்றும் வர்த்தகமாகியது. இந்த நிலையில் நடப்பு ஆண்டின் வித்தியாசம் 4.132 ரூபாயாகும். இது நடப்பு ஆண்டில் சராசரியாக ரூபாயின் மதிப்பு 70.380 ஆகும். நடப்பு ஆண்டில் இது கிட்டதட்ட 2.2% வீழ்ச்சி கண்டுள்ளது.
உச்சம் தொட்ட ரூபாய்?
கடந்த 2018ல் இந்திய ரூபாயின் மதிப்பு 74.490 ரூபாய் வரை சென்று வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 72.412 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் இந்த ஆண்டிலேயே இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதற்கு காரணம் கடந்த ஆண்டை விட பொருளாதாரம் மோசமான நிலையிலும் இருந்தாலும் அரசின் முக்கிய நடவடிக்கைகள் கைகொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஏனெனில் இந்திய சந்தைகளில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவதாலும், இந்தியாவில் முக்கிய எட்டு துறைகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவு வீழ்ச்சி கண்டது.
படு வீழ்ச்சி
இந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியானது கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் 5.2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக நிலக்கரி உற்பத்தி குறியீடு -20.5 சதவிகிதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதே இயற்கை எரிவாயு உற்பத்தியானது -4.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே சுத்திகரிப்பு பொருட்கள் வளர்ச்சியானது -6.7 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதே ஸ்டீல் உற்பத்தியானது -0.3 சதவிகிதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் மின்சாரம் என பல துறைகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
கொஞ்சம் பரவாயில்லை
நடப்பு நிதியாண்டில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட வட்டி குறைப்பு நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் அதிகளவில் வீழ்ச்சி காண்பது தடுக்கப்பட்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகளவில் வீழ்ச்சி காண்பது தடுக்கப்பட்டது என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனா பிரச்சனை
அமெரிக்கா சீனாவிடையே நிலவி வந்த வர்த்தக போரானது தற்போது வரையில் முடிவுக்கு வராத நிலையில், உலக பொருளாதாரமே வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் சர்வதேச நாடுகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன? இதனாலேயே இந்திய பொருளாதாரமும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தான் வர்த்தக போரானது முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு மீள்ச்சியடையலாம் என்றும் கூறப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் கருதப்படுகிறது. எனினும் மத்திய அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பினால் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி விகிதமும் அதிகரிக்கும். மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு கடன் வழங்க அரசு வலியுறுத்தி வந்தது. இதுவும் நடப்பு ஆண்டில் அதிகப்படியான வீழ்ச்சியை தடுத்தது.
நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் பணவீக்கம் தொடந்து அதிகரித்து வருவதும் இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் 2018ல் 3.7 சதவிகிதமாகவும், நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 3.28 சதவிகிதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம் அதிகரிப்பு
இதே உணவு பணவீக்கமானது கடந்த 2018 செப்டம்பரில் 0.51 சதவிகிதமாகவும், இதே நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 0.51 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 5.11 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதே செப்டம்பர் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்கமானது 15.4 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இறைச்சி மற்றும் மீன்களின் பணவீக்கமானது 10.29 சதவிகிதமாகவும், இதே தானியங்கள் 8.4 சதவிகிதமாகவும், இதே ஹெல்த் 7.66 சதவிகிதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றளவிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கமானது இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
இந்த நிலையில் இன்று 71.12 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.