நடப்பு ஆண்டில் இப்படி ஒரு மோசமான நிலையை இந்தியா எட்டும் என்று, யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
ஏனெனில் கடந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் தான், இந்தியாவில் நாடு தழுவிய முழு லாக்டவுன் என அடுத்தடுத்து இந்தியாவினை ஆட்டிப்படைக்கும் செய்திகளாகவே வந்து கொண்டிருந்தன.
ஒருபுறம் சீனா -இந்தியா எல்லை பிரச்சனை, கொரோனா வைரஸ் பரவல், வரலாறு காணாத நாடு தழுவிய லாக்டவுன், வெறிச்சோடிய சாலைகள், முடங்கிப் போன தொழிற்சாலைகள், கால வரையற்ற பள்ளி, கல்லூரி விடுமுறை, காற்று வாங்கிக் கொண்டிருந்த சுற்றுலா தளங்கள், ஹோட்டல்கள், தங்கம் விடுதிகள், அதிகரித்த பணவீக்கம், உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு என பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் முடங்கின.
வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு
உண்மையில் மார்ச் 25 முதல் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியா சற்று ஸ்தம்பித்து தான் போனது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். பலர் தங்களுக்கு கிடைக்கும் அடிப்படை வருமான ஆதாரங்களை இழந்தனர். லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். உற்பத்தி சரிவு, வரலாறு காணாத ஏற்றுமதி இறக்குமதி வீழ்ச்சி, இப்படி எல்லாம் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராகவே அமைந்தன. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பு ஆண்டில் பெரிதும் வீழ்ச்சியிலேயே காணப்படுகிறது.
அதள பாதாளம் நோக்கி சென்ற ரூபாய்
கடந்த 2018ம் ஆண்டில் 74.490 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 77 ரூபாயினையும் தாண்டியது. நடப்பு ஆண்டில் ஜனவரி தொடக்கத்தில் 71.36 ருபாயாக இருந்த ரூபாயின் மதிப்பானது, லாக்டவுன் அமல்படுத்தும் முன்னரே, அதாவது மார்ச் 24 அன்றே 76.37 ரூபாயாக சரிந்தது. ஆனால் இந்த வீழ்ச்சி அதோடு நின்றபாடாக இல்லை. ஏப்ரல் மாதத்தில் 77 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டது.
சற்றே அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தில் யாரும் எதிர்பாராத விதமாக 77 ரூபாயாக சரிந்த மதிப்பு, அதன் பிறகு சற்று அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத கடைசிலேயே 74.90 ரூபாயாக அதிகரித்த நிலையில் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக செப்டம்பர் 15 அன்று 72.75 ரூபாயாக அதிகரித்தது. எனினும் தற்போதைய நிலவரப்படி (டிசம்பர் 7 நிலவரப்படி) 73.80 ரூபாயாக காணப்படுகிறது.
நடப்பு ஆண்டில் ரூபாயின் ஒட்டுமொத்த நிலவரம்?
நடப்பு ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 70.70 ரூபாயாக அதிகரித்தது. இது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முன்பு ஜனவரி 13 அன்று தொட்டது. இதே அதிகபட்சமாக 77 ரூபாயாக ஏப்ரல் 21 அன்று சரிந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டின் வித்தியாசம் 6.3 ரூபாயாகும். நடப்பு ஆண்டில் இதுவரையில் சராசரி ரூபாயின் மதிப்பு 73.85 ஆகும்.
முதல் காலாண்டில் வரலாறு காணாத வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23.9% வீழ்ச்சி கண்டது. இது மார்ச் மாத இறுதியில் தொடங்கிய லாக்டவுன் இன்று வரையிலும் கூட பற்பல தளர்வுகளுடம் நீடித்து வருகின்றது. அதிலும் லாக்டவுனின் ஆரம்ப காலகட்டத்தில் அத்தியாவசியம் தவிர வேறு எதற்கும் அனுமதிகள் கொடுக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைக்கே கூட, நேரம் ஒதுக்கப்பட்டது. ஆக இதனால் முதல் காலாண்டில் வரலாறு காணாத வீழ்ச்சியினை முதல் காலாண்டில் எட்டியது.
இரண்டாவது காலாண்டிலும் சரிவு தான்
முதல் காலாண்டில் -23.9% வீழ்ச்சி கண்டிருந்த பொருளாதார சரிவு, இரண்டாவது காலாண்டிலும் -7.5% ஆக வீழ்ச்சி கண்டது. எனினும் நிபுணர்கள் இதனை 10% மேல் சரியக்கூடும் என்று கணித்திருந்த நிலையில், இது சற்று குறைந்த வீழ்ச்சியினை கண்டது. எனினும் அடுத்து வரும் காலாண்டுகளில் இது வளர்ச்சி காணலாம் என்றாலும், ரூபாயின் மதிப்பு நடப்பு ஆண்டில் பெரிதும் அதிகரிக்கவில்லை.
பல துறைகளும் வீழ்ச்சி
இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியானது லாக்டவுன் காலகட்டத்தில் முடங்கிய நிலையில், தற்போது தான் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆக இது இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்புவதை சுட்டிக் காட்டுகின்றது. எனினும் இது பழைய நிலைக்கு அதாவது 65 - 68 என்ற நிலைக்கு திரும்புமா என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இந்தியா மெதுவான வளர்ச்சி
இந்தியா தற்போது எதிரபார்த்ததைவிட வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், வளர்ச்சி மெதுவான வேகத்திலேயே திரும்பிக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக ரூபாயின் மதிப்பு சற்றே அதிகரித்தாலும், இந்தியா தனது முழு வளர்ச்சியினை எட்ட சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 1% வளர்ச்சியினை எட்டுவதே பெரிய விஷயம் என நிபுணர்கள் கூறுகின்றன்ர்.
கொஞ்சம் பரவாயில்லை
நடப்பு நிதியாண்டில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட வட்டி குறைப்பு நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் அதிகளவில் வீழ்ச்சி காண்பது தடுக்கப்பட்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகளவில் வீழ்ச்சி காண்பதும் தடுக்கப்பட்டது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனா பிரச்சனை
கடந்த ஆண்டில் அமெரிக்கா சீனாவிடையே நிலவி வந்த வர்த்தக போரானது தற்போது வரையில் முடிவுக்கு வராத நிலையில், கடந்த ஆண்டில் உலக பொருளாதாரமே வீழ்ச்சி கண்டது. அப்போது சர்வதேச நாடுகள் அனைத்தும் வீழ்ச்சி கண்ட நிலையில், இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன? இதனாலேயே இந்திய பொருளாதாரமும் படு வீழ்ச்சி கண்டது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மந்த நிலையை தொடர்ந்து கொரோனாவும் வந்தது.
அமெரிக்க – சீன வர்த்தக பிரச்சனை
ஆரம்பத்தில் வெறும் வர்த்தக பிரச்சனையாக தொடங்கிய அமெரிக்க - சீன பிரச்சனை, பின்னாளில் எது எடுத்தாலும் பிரச்சனையாகவே மாறியது. ஏன் கொரோனாவினையே சீனா தான் வெளியிட்டது. சீன நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் சீன அப்படி செய்யவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டியது அமெரிக்கா. இதன் பிறகு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க தொடங்கியது. தற்போது புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் வருக்கைக்கு பின்பாவது இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரையில் பிரச்சனை நீடித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆக இதுவும் ஒரு பின்னடைவான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
ஆரம்பத்தில் நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும், இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் கருதப்படுகிறது. எனினும் தற்போது அரசு அன்னிய முதலீடுகளை ஈர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக தற்போது முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் பணவீக்கம் தொடந்து அதிகரித்து வருவதும் இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் 2018ல் 3.7% இருந்த நிலையில், இது நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 7.27% ஆகவும், அக்டோபரில் 7.61% ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காண முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 7.59% ஆக இருந்தது கவனிக்கதக்கது.
உணவு பணவீக்கம் அதிகரிப்பு
இதே உணவு பணவீக்கமானது கடந்த 2018 செப்டம்பரில் 0.51 சதவிகிதமாகவும், இதே ஆகஸ்ட் 2019ல் 0.51 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 5.11 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 13.63% ஆகவும், இதே அக்டோபர் மாதத்தில் 11.07% ஆகவும் அதிகரித்துள்ளது. இன்றளவிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு பணவீக்கமானது இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.