இந்தியாவின் போக்குவரத்தில் சாலை, ரயில் போக்குவரத்திற்குப் பின்பு மிகப்பெரிய அளவில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் முக்கியமாக விமானப் போக்குவரத்து சேவை உலக நாடுகளுக்கு இணையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கடனில் இருக்கும் விமானச் சேவை நிறுவனத்தையும், விமான நிலையங்களையும் தனியாருக்கு மத்திய அரசு விற்பனை செய்தும், நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு அளித்தும் வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவையை மத்திய அரசு பல மாதங்களாக முடக்கி வைத்திருந்த நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் இயங்கி வருகிறது.
தற்போது இரு முக்கிய அறிவிப்புகளை மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.
விமானப் பயணிகள் எண்ணிக்கை
ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் விமானங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 72.5 சதவீத பயணிகள் எண்ணிக்கையை 85 சதவீதமாக உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
கட்டண பிரிவு விதிகள்
இதோடு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கட்டண பிரிவு விதிகளை இனி 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் விமான டிக்கெட் கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கட்டண பிரிவு விதிகளை அக்டோபர் 4 வரையில் நடைமுறையில் இருக்கும்.
கட்டண பிரிவு விதிகள் என்றால் என்ன..?
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்த விமானப் போக்குவரத்துத் துறையின் வர்த்தகத் துறையை மேம்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அப்பர் பேண்ட் மற்றும் லோவர் பேண்ட் எனப் பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயம் செய்யும் கட்டண பிரிவு விதிகளை அமலாக்கம் செய்தது.
விமானப் போக்குவரத்து வர்த்தகம்
இந்தக் கட்டண பிரிவு விதிகள் படி தான் அனைத்து நிறுவனங்களும் விமானச் சேவை அளிக்க வேண்டும் என்ற நிலை இருந்த காரணத்தால் போட்டிகள் இல்லாமல் விமானப் போக்குவரத்து வர்த்தகம் மேம்பட்டது. சமீபத்தில் அப்பர் பேண்ட் மற்றும் லோவர் பேண்ட் கட்டணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது 15 நாட்கள் மட்டுமே இந்தக் கட்டண பிரிவு விதிகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
15 நாட்கள் மட்டுமே
இதன் மூலம் 15 நாட்களுக்கு முன்பு புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மானிய விலையில் அளிக்கப்படும், ஆனால் 30 நாட்களுக்கு முன்பு புக் செய்யப்படும் டிக்கெட் விலை எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நிர்ணயம் செய்ய முடியும். இதனால் 15 நாட்களுக்கு முன்கூட்டியே புக் செய்யப்படும் டிக்கெட் விலை அதிகரிக்க உள்ளது.
விமானக் கட்டண அளவீடுகள்
2021ல் மட்டும் கட்டண பிரிவு விதிகள் அடிப்படையில் நான்கு முறை விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 40 நிமிடத்திற்குக் குறைவான பயண நேரம் கொண்ட பயணத்திற்குக் குறைந்தபட்சம் 2,900 ரூபாயும், அதிகப்படியாக 8,800 கோடி ரூபாயும் விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 180 முதல் 210 நிமிடங்கள் வரையிலான பயணத்திற்குக் குறைந்த பட்சம் 9,800 ரூபாயும் அதிகப்படியாக 27,200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
டிக்கெட் விலை உயரும்
இந்த விலை அளவீடுகள் தற்போது 15 நாட்கள் வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்தாலும் அதிகக் கட்டணத்தைத் தெலுத்த வேண்டி வரும். இதனால் விமானங்களில் செல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும்.