சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக பில்லியனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானியும், தங்கள் தந்தையின் சொத்தினை பிரிக்க நீதிமன்றம் வரை சென்று சண்டையிட்டுக் கொண்டனர்.
அம்பானி சகோதரர்களின் தந்தை கடந்த 2012ம் ஆண்டில் எந்தவொரு உயிலோ அல்லது சொத்து பிரிப்பு சம்பந்தமான எந்த ஆவணத்தையும் எழுதாமல் இறந்து விட்டார்.
இதுவே அப்போது அம்பானி சகோதரர்களிடையே பெரும் பிரச்சனையாகவும் வளர்ந்தது. நீதிமன்றம் வரை சென்றது.
சொத்து பிரிப்பு நடவடிக்கை
தற்போது அதே இடத்தில் தான் முகேஷ் அம்பானியும் உள்ளார். தனது தந்தை செய்த அதே முட்டாள்தனத்தினை செய்யாமல், தான் இருக்கும்போது சொத்தினை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானிக்கும், அவருடைய தம்பிக்கும் சொத்திற்காக பிரச்சனை ஏற்பட்டு, எப்படியோ பிரச்சனையை முடித்துக் கொண்டு சுமூக தீர்வும் எட்டப்பட்டு விட்டது.
பிரச்சனை வேண்டாம்
ஆனால் அதே சுமூக பிரச்சனையினை தனது குழந்தைகளும் எட்டுவார்களா? அந்த பிரச்சனையே வரக்கூடாது என்று முகேஷ் அம்பானி நினைத்திருக்கலாம். தனது தம்பிக்கும், தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை போல, தன் குழந்தைகள் மத்தியில் வரக்கூடாது என்பதாக கூட இருக்கலாம். மொத்ததில் தனது தம்பியினை போல, திவால் ஆகி விடக் கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்.
ஆகாஷ் அம்பானி வசம் ஜியோ
அந்த வகையில் முகேஷ் அம்பானி தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், அவருடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, தொலைத் தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவில் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் அம்பானியின் கவனம்
62 வயதினை எட்டியுள்ள முகேஷ் அம்பானி 2028ம் ஆண்டிற்குள் பெரும்பாலான தொழில்களை, இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்க போவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது 30 வயது மூத்த மகனை ஜியோவுக்கு தலைவராகவும் நியமித்துள்ளார். ஆகாஷ் அம்பானி மொபைல் மட்டுமின்றி அனைத்து விதமான தொலைத் தொடர்பு சாதனங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். ஜியோ மொபைல், ஜியோ ஹாட்ஸ்பாட், ஜியோ பைபர் என பல வழிகளிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.
இஷா அம்பானிக்கு என்ன?
இனி அடுத்து பலருக்கும் இருக்கும் கேள்வி, அடுத்து அனந்த் அம்பானிக்கும், இஷா அம்பானிக்கு என்ன பதவி, என்ன துறை என்பது தான்
அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகமானது இந்தியாவின் மிகப்பெரிய வணிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. அதோடு ஆன்லைனிலும் ஜியோமார்டினை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்து வருகின்றது. இந்த துறைக்கு, முகேஷ் அம்பானியின் செல்ல மகள் இஷா அம்பானி தலைவராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனந்த் அம்பானிக்கு?
கடை குட்டி அனந்த் அம்பானிக்கு எண்ணெய் முதல் கெமிக்கல் வணிகத்தினை ஒதுக்கலாம் என தெரிகிறது. தற்போது பூஜ்ஜிய உமிழ்வு நடவடிக்கையின் மத்தியில் பசுமை ஆற்றலிலும் முகேஷ் அம்பானி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சோலார் பேனல்கள் முதல் பச்சை ஹைட்ரஜன் வரையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.