இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ லாப அளவுகள் குறைந்த நிலையில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்தது, இதேபோல் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்தது.
இந்தியாவில் பிரபலமாகி வரும் Moonlighting கான்சென்ப்ட்-ஐ அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் எதிர்த்து வரும் நிலையில், விப்ரோ தலைவரும் நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவருமான ரிஷாத் ப்ரேம்ஜி Moonlighting என்பது Cheating வேலை எனக் கடுமையாக விமர்சனம் செய்து ட்வீ ட் செய்திருந்தார்.
இப்படிப் பல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருக்கிறது விப்ரோ. தற்போது இந்நிறுவனத்தின் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் அட்ரிஷன் விகிதத்தைக் கட்டுப்படுத்த கடைசியாகக் கையில் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் இது மட்டுமே...
விப்ரோ
விப்ரோ கடந்த சில காலாண்டுகளாக அதிகச் செலவு விகிதங்கள் மற்றும் மார்ஜின் அழுத்தங்களுக்கு மத்தியில் போராடி வருகிறது. 2,58, 574 பேர் பணிபுரியும் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 23.3 சதவிகிதம் ஆட்ரிஷன் விகிதத்தை எதிர்கொண்டு வருகிறது.
தியரி டெலாபோர்ட்
மேலும் 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது மார்ச்- ஜூன் 2022 காலாண்டில் 15,000 ஊழியர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் மற்றும் நிர்வாகத் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி உட்பட நிறுவனத்தின் உயர் நிர்வாகமும் பல சந்தர்ப்பங்களில் ஆட்ரிஷன் விகித பிரச்சினையைச் சமாளிப்பது குறித்துப் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின்படி, 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 12.1 சதவீதமாக இருந்தது. அடுத்த காலாண்டில், 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் 15.5 சதவீதமாகவும், அடுத்த காலாண்டில் 20.5 சதவீதமாக உயர்ந்தது.
23.8 சதவீதம்
இதைத் தொடர்ந்து 2021-22 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் அட்ரிஷன் விகிதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 22.7 சதவீதமாக இருந்தது, 2021-22 நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் இது 23.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
செலவுகள்
இப்படி ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் காரணத்தால் இப்பதவிகளில் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பது என்பது மிகவும் கடினமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதிகச் சம்பளத்தில் பணியில் அமர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் நிறுவனத்தில் செலவுகள் தாறுமாறாக அதிகரித்து லாபம் குறைந்துள்ளது.
பதவி உயர்வு
விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றத்தைச் சமாளிக்கப் பதவி உயர்வை வருடாந்திர அடிப்படையில் அளிக்காமல் காலாண்டு வாரியாக அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 70 சதவீத ஊழியர்களைத் தக்க வைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்தில் விப்ரோ-வில் தான் மோசமான அட்ரிஷன் விகிதம் உள்ளது.