ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் பயன்பாட்டு வந்ததும் தான் வந்தது, நிறுவனங்கள் இதையே காரணமாக கூறி ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகின்றன. 2025ஆம் ஆண்டு, நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது.
நாள்தோறும் ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுக்கின்றன. கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஹெச்பி நிறுவனமும் ஊழியர்கள் பணி நீக்கத்தை அறிவித்திருக்கிறது.

கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி தங்கள் நிறுவன ஊழியர்களில் 10% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் 2028 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய ஊழியர்களில் 4000 முதல் 6000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என ஹெச்பி நிறுவனம் கூறி இருக்கிறது. தங்களுடைய நிறுவன செயல்பாடுகளை சீரமைக்கவும், உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுப்பதாக ஹெச்பி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என்ரிக் லாரஸ் தெரிவித்திருக்கிறார் .
பணி நீக்க அறிவிப்பு வெளியானதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் ஹெச்பி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5.5 சதவீதம் சரிவை கண்டது. தங்கள் நிறுவனத்தின் ப்ராடக்ட் டெவலப்மென்ட் மற்றும் கஸ்டமர் சப்போர்ட், இன்டர்னல் ஆபரேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்து வந்த நபர்கள் இந்த பணி நீக்கத்தால் வேலை இழப்பார்கள் என நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பணி நீக்கத்தின் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர்கள் சேமிப்பாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹெச்பி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே சுமார் 2000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது ஏஐ திறன் கொண்ட கணினிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தங்கள் நிறுவனம் ஏஐ திறன் கொண்ட கணினி தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக லாரஸ் தெரிவித்திருக்கிறார். அக்டோபருடன் முடிவடைந்து காலாண்டில் ஹெச்பி நிறுவனம் ஏற்றுமதி செய்த கணினிகளில் 30 சதவீதம் ஏஐ திறன் கணினிகள் என அவர் கூறியிருக்கிறார்.
தற்போது உலக அளவில் மெமரி சிப்புகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் கணினி தயாரிப்பு விலை அதிகரித்திருப்பதாக லாரஸ் கூறுகிறார். சிப் தயாரிப்பு நிறுவனங்கள் டேட்டா செண்டர்களுக்கு சிப் சப்ளை செய்வதில் தான் கவனம் செலுத்துகின்றன, இதனால் கணினி தயாரிப்புகளுக்கு சிப்கள் கிடைப்பதில்லை என்கிறார்.
எனவே தங்கள் நிறுவனங்களின் கணினிகளின் விலை உயரப்போவதாக தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலான மெமரி சிப்புகள் தங்கள் கைவசம் இருப்பதாகவும் அதன் பின்னர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் லாரஸ் இதன் காரணமாக தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலை உயரக்கூடும் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications