இந்தியாவில் டெக் சேவைகள் மற்றும் டிஜிட்டல் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் புதிய டெலிகாம் சேவைகள் மிகவும் முக்கியமானதாக மட்டும் அல்லாமல் அவசியமானதாகவும் விளங்குகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளது. இதேபோன்ற சேவையை எங்கோ கேட்டது போல் உள்ளதா..?
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ரீடைல் சேவையாக விளங்கும் ஸ்டார்லிங்க்-ம் இதேபோன்ற செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவையை அளிக்கிறது. சொல்லப்போனால் உலகில் முதல் முறையாக இதுபோன்ற திட்டத்தை உருவாகியது ஸ்பேஸ்எக்ஸ் தான்.
பார்தி ஏர்டெல்
இப்பிரிவு சேவையில் எலான் மக்ஸ்-ன் ஸ்பேஸ்எக்ஸ் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்நிறுவனத்திற்குப் போட்டியாக உலகில் பல நிறுவனங்கள், அமைப்புகள் களத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இத்துறைக்குள் குதித்துள்ளது.
பார்தி ஏர்டெல் கூட்டணி
பார்தி ஏர்டெல் நிறுவனம், அமெரிக்காவின் ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்துடன் புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராட்பேண்ட் சேவையை அளிக்கத் திட்டமிட்டு உள்ளது.
பார்தி ஏர்டெல் - ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ்
பார்தி ஏர்டெல் மற்றும் ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடம் இருக்கும் இந்திய VSAT ஆப்ரேஷன்ஸ்-ஐ இணைத்து செயற்கைக்கோள் மற்றும் ஹைப்ரிட் நெட்வொர்க் சேவைகளை வர்த்தகம் மற்றும் அரசு அமைப்புகளுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
VSAT வர்த்தகம்
தற்போது உருவாக்கப்படும் கூட்டணி நிறுவனத்தில் இரு நிறுவனங்களின் 2,00,000 VSAT (Very Small Aperture Terminal) வர்த்தகமும் இணைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுத் தற்போது NCLT, மத்திய டெலிகாம் துறை ஒப்புதல்களைப் பெற்றுள்ள நிலையில் இக்கூட்டணி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
ஸ்டார்லிங்க் ப்ரீ ஆர்டர் பிரச்சனை
இதேவேளையில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முன்னர், மத்திய அரசிடம் ஒப்புதல் பெறும் முன்னர் இந்திய மக்களிடம் இச்சேவைக்கான ப்ரீ ஆர்டர் அறிவித்து முன்பணத்தைப் பெற துவங்கியது.
மத்திய அரசு எதிர்ப்பு
இதைக் கடுமையாக மத்திய டெலிகாம் துறை எதிர்த்த நிலையில், ஸ்டார்லிங்க் இந்தியா ப்ரீ ஆர்டர் சேவையை முழுமையாக நிறுத்தியது மட்டும் அல்லாமல் இதுவரை பெற்ற 5000 ப்ரீ ஆர்டருக்கான முன்பணத்தைத் திருப்பிச் செலுத்த உள்ளது. இது எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாக உள்ளது.