நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான, சோப்புகள், சானிடைசர்கள் என பல பர்சனல் கேர் பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஏனெனில் இதுவரையில் இந்த கொடிய வைரஸ்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸினை கட்டுப்படுத்த சுகாதாரத்தினை கடைபிடித்தல் மிக அவசியம் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவர்களும் அடிக்கடி கைகளை கழுவதன் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்றும் கூறி வருகின்றனர்.
விலை அதிகரிப்பு
இதனால் கொரோனா தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயத்தினால் தங்களை பாதுகாத்து கொள்ள, பல வகையான சானிடைசர் மருத்துவ பொருட்கள் என அனைத்தையும் வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தான் சரியான வாய்ப்பு சில கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றன. இப்படி அத்தியாவசிய தேவைகளான சோப்பும் சானிடைசர் உள்ளிட்ட பல பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது எனவும், மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விலை குறைப்பு
இந்த நிலையில் வேகமாக நுகரக் கூடிய பர்சனல் கேர் பொருட்களான லைஃப்பாய் சோப், சானிடைசர், டொமக்ஸ் கீளினர் என பல பொருட்கள் 15% விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யவும், அதே நேரம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்.யு.எல், நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையில் ஒரு பெரிய பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நெருக்கடியை சமாளிக்க உதவி செய்வோம்
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் மேக்தா கூறுகையில், இதுபோன்ற நெருக்கடியில் நிறுவனங்களுக்கு பெரிய பங்கு உண்டு. இந்த உலகளாவிய நெருக்கடியை சமாளிப்பதற்காக நாங்கள் ஒன்றாக சமாளிப்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் அரசாங்களுடனும், எங்கள் கூட்டாளர்களுடனும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
சோப்புகளை இலவசமாக வழங்க முடிவு
மேலும் அடுத்த சில மாதங்களில் 2 கோடி லைஃப் பாய் சோப்புகளை மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவும் செய்துள்ளோம். இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோதனை மற்றும் பராமரிப்பு வசதிகளை வழங்கி வரும் மருத்துவ நிறுவனங்களுடன் இது பங்குதாரர்களாக இருக்கும், மேலும் அவர்களுக்கு சுகாதார சம்பந்தமான தயாரிப்புகளான சோப்புகள், சானிடைசர்கள், தரை துடைப்பான்கள், உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவோம் என தெரிவித்துள்ளது.
ரூ.10 கோடி நிதி வழங்க முடிவு
மேலும் 10 கோடி ரூபாய் நிதியினை சோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், பால் தயிர், அரிசி, ஆட்டா, எண்ணெய் மற்றும் பயறு, சோப்புகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
உற்பத்தி அதிகரிப்பு
ஆக பல நிறுவனங்கள் குறிப்பிட்ட பல பொருட்கள் இல்லை என்று கூறுவதைக் காணலாம். அதுவும் ஈ காமர்ஸ் நிறுவனங்கள் ஹேண்ட் வாஷ் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள் தயாரிப்புகள் முடிந்து விட்டதாக புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பல உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர் என்றும் ஹெச்.யு.எல் தெரிவித்துள்ளது.
இது தான் சரியான நேரம் என அதிக விலைக்கு விற்று வரும் நேரத்தில், விலையை குறைத்திருக்கும் ஹெச் யு எல் உண்மையில் ஒரு ஹீரோ தான்..


Click it and Unblock the Notifications