சென்னை: ஹூரன் இந்தியா 2024 பணக்காரர் பட்டியலில் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இதன் மூலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஹூரன் இந்தியா கடந்த சில வருடங்களாக இந்தியப் பணக்காரர்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து பல முக்கியமான பட்டியலையும், தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் ஹூரன் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் உடன் வெளியான அறிக்கையில் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவானதாக ஹூரன் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஹூரன் இந்தியா 2024 பணக்காரர் பட்டியலில் ஜூலை 31, 2024 நிலவரப்படி சொத்து மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஹூரன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில் "ஆசியாவின் செல்வம் உருவாக்கும் இயந்திரமாக இந்தியா, உருவாகி வருகிறது! சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்த நிலையில், இந்தியாவில் 29% அதிகரித்து நாட்டில் 334 கோடீசுவரர்கள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை எட்டியுள்ளது" என்று கூறினார்.
ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2024: கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
இவரை தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம், ரூ.1,014,700 கோடி சொத்து மதிப்புடன் 2024 ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிவ் நாடார் மற்றும் குடும்பம் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.314,000 கோடி.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ். பூனாவாலா மற்றும் குடும்பம் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சன் ஃபார்மா இண்டஸ்ட்ரீஸின் திலீப் சாங்வி 5வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆறு நபர்கள் தொடர்ந்து இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருந்துள்ளனர் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, சிவ் நாடார், சைரஸ் எஸ். பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிருஷ்ணன் தாமணி ஆகியோர் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர் என ஹூரன் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்: 2024 ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இளம் பில்லியனராக 21 வயதான ஜெப்டோ நிறுவனத்தின் கைவல்ய வோரா ஆவார். ஜெப்டோ நிறுவனம் தற்போது 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள குவிக் கம்ர்ஸ் நிறுவனம். அவரது இணை நிறுவனர் ஆதித் பாலிச்சா, 22 வயது, இப்பட்டியலில் இரண்டாவது இளம் பில்லியனராக உள்ளார்.
ஷாருக்கான் பட்டியலில் இடம் பிடித்தார்: முதல் முறையாக, இந்திய பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான், ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது முக்கியமாக IPL அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததால் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications