கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியச் சீன ராணுவ வீரர்கள் மத்தியில் நடத்தத் தாக்குதலுக்குப் பின் சீன வர்த்தகத்திற்கும், முதலீட்டிற்கும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் அதேவேளையில், மக்கள் மத்தியில் சீன பொருட்களுக்கும், சேவைகளுக்கும் கடுமையான வெறுப்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சீன முதலீட்டில் இயங்கி வரும் ஹைதராபாத் Gland பார்மா நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையான செபி-யிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஒரு இந்திய நிறுவனம் சீன தாய் நிறுவனமாகக் கொண்டு ஐபிஓ-வில் இறங்க விண்ணப்பம் செய்துள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் செபி ஐபிஓ-விற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது முக்கியமான கேள்வியாக விளங்குகிறது.
Gland பார்மா
1978ஆம் ஆண்டுப் பி.வி.என் ராஜூ என்பவரால் துவங்கப்பட்ட Gland பார்மா நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டுச் சீனாவின் Fosun பார்மா சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து 74 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதன் மூலம் Gland பார்மா-வின் தாய் நிறுவனமாக Fosun சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் Fosun பார்மா ஆகிய நிறுவனங்கள் விளங்குகிறது.
இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஊசி போடுவதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு மருந்துகளை (injectables) தயாரித்து வருகிறது.
ஐபிஓ திட்டம்
இந்த ஐபிஓ திட்டத்தின் மூலம் Gland பார்மா கூட்டணி நிறுவனம் சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளைப் புதியதாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதோடு offer for sale பிரிவில் சுமார் 3.4 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகச் செபி அமைப்பிடம் சமர்ப்பித்துள்ள DRHP அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3.4 கோடி பங்குகள்
offer for sale பிரிவில் Fosun பார்மா இண்டஸ்ட்ரீயல் pte லிமிடெட் 1.93 கோடி பங்குகளும், Gland செல்சஸ் பயோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் 1 கோடி பங்குகளையும், எம்பவர் டிஸ்கிரிஷ்னரி டிரஸ்ட் 35.73 லட்சம் பங்குகளையும், நிலை டிஸ்கிரிஷ்னரி டிரஸ்ட் 18.74 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் Gland பார்மா நிறுவனம் 3,000 கோடி ரூபாய் முதல் 5,000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை ஈர்க்க முடியும். ஆனால் செபி ஐபிஓ-விற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
86% பங்குகள் கனவு
2017இல் Fosun பார்மா சுமார் 86 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்காக அனைத்து விதமான பணிகளையும் செய்து வந்த நிலையில் செபி தலையிட்டு இந்திய நிறுவனத்தின் அதிகாரம் சீன நிறுவனத்திற்குச் சென்றுவிடும் எனக் கணக்கிட்டு 74 சதவீத பங்குகளை மட்டுமே கைப்பற்ற அனுமதி கொடுத்தது.