சாதிப்பதற்கு வயது தடை இல்லை என்று பலர் கூற கேட்டிருப்போம். இதை 23 வயதான பட்டதாரி இளைஞர் நிரூபித்து காட்டியுள்ளார். நம்முடைய நோக்கமும் சிந்தனையும் தெளிவாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார். சாய் தேஜா கோபிஷெட்டி என்ற 23 வயதான இளைஞர் ஹைதராபாத்தில் உள்ள ஆக்சன் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படித்த பட்டதாரி. தான் படித்து முடித்த வெறும் ஒன்றரை ஆண்டுகளிலேயே ரூ.20 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார்.
சாய் தேஜா, "லுமினாரா லெகஸி பிரைவேட் லிமிடெட்" என்ற விவசாயம் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தன்னுடைய நிறுவனத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உயர்தர விதைகள், பூச்சு கொல்லி மருந்துகள், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பிற விஷயங்களையும் விற்பனை செய்து வருகிறார்.

நவீன விவசாயத்திற்கு உதவுவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே இந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படும் நிறுவனத்தை தொடங்கிய சாய்தேஜா, வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் தன் நிறுவனத்தை ரூ.100 கோடி மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்து வருகிறார். அவருடைய நிறுவனத்தை பற்றி தெரிந்த ஒருவர் தன்னுடைய X பக்கத்தில் அது குறித்த விபரங்களை பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்டதிலிருந்து இணையவாசிகள் சாய் தேஜாவை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர் 23 வயதிலேயே இதை செய்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சரியான திட்டமிடல் மற்றும் உழைப்பு இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே சான்று. 2028-ஆம் ஆண்டில் ரூ.100 கோடியை எட்ட வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார். மற்றொரு பயனர் வெற்றியை வயது தீர்மானிக்காது. நாம் செயல்படும் வேகமும் விடாமுயற்சியும், உலகில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நாம் காணும் தீர்வுகளும் தான் நம் வெற்றியை தீர்மானிக்கின்றன என்று பதிவிட்டிருந்தார்.
படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்று காத்திருக்காமல் விவசாயத் துறையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். அதுவும் இன்றைய பணி நீக்க சூழலில் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுவது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அதற்கு ஏற்ப மத்திய மற்றும் மாநில அரசுகளும் தொழில் முனைவோருக்கென்று லோன்களை வழங்கி வருகின்றன. அரசு வழங்கும் இத்தகைய திட்டங்களை பயன்படுத்தி சரியான பாதையில் பயணித்தால்.. நம் நாட்டின் பொருளாதாரமும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.


Click it and Unblock the Notifications
