நெருக்கடியில் உள்ள ஆட்டோமொபைல் துறை கடந்த ஒரு வருடமாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக மந்த நிலையின் காரணமாக வாகன விற்பனை சரிவு, இதனால் வாகன உற்பத்தி வீழ்ச்சி, வேலை இழப்பு என தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றன.
மறுபுறம் ஆட்டொமொபைல் நிறுவனங்களும் இப்படியொரு மோசமான நிலையை சமாளிக்க முதலில் பணி நீக்கம், வி.ஆர்.எஸ் என நடவடிக்கைகளை எடுத்தன. எனினும் இந்த நடவடிக்கைகள் கைகொடுக்காத நிலையில், தற்போது கார்களின் விலையையும் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரத்தில் மாருதி சுசூகி தனது கார்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனமும் விலை அதிகரிப்பு எனும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ள்ளது.
வாகனத் தேவை குறைவால் வாகன விற்பனை மந்தமானதால், வாகன உற்பத்தியை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து குறைத்து வந்தன. மேலும் வரவிருக்கும் பிஎஸ் 6 புதிய விதிகளின் படி தயாரிக்கும் கார்கள் வழக்கமான கார்களின் விலையை செலவினங்கள் அதிகரித்துள்ளதால், உற்பத்தி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
இதன்படியே ஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுஸுகி நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தன. இதுபோன்ற சூழலில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், வாகனச் சந்தையில் இரண்டாவது இடம் வகித்து வருகிறது. கிரெட்டா, எலாண்ட்ரா, டக்ஸன், எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸெண்ட், இயான் ஆகிய 10 மாடல்களை இந்த நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மேற்கூறிய அனைத்து கார்களின் விலையும், அதன் எஞ்சின் தரம், மாடலைப் பொறுத்து ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலை அதிகரிப்பு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications