இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை இதுவரை காணாத பல விசித்திரங்களைக் கண்டு கொண்டு இருக்கிறது.
அதுவும் கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையில், பல புதிய கொள்கை முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் மிக முக்கியமான விஷயம் என்ன என்றால் அது பாரத் ஸ்டேஜ் 6 ரக எமிஷன் விதிகள் தான்.
பாரத் ஸ்டேஜ் 6
வரும் ஏப்ரல் 01, 2020 முதல், எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும், பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை விற்கக் கூடாது என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. அதோடு புதிதாக மின்சார வாகனங்களை அதிகம் புழக்கத்தில் கொண்டு வரவும் அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஒரே மாதம் தான்
இன்னும் சில நாட்களில் பிப்ரவரி முடிந்து விடும். அடுத்த மார்ச் 2020-க்குள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்கள் கையில் இருக்கும் அனைத்து பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களையும் விற்று இருக்க வேண்டும். இல்லை என்றால் சரக்கு கையில் தேங்கிவிடும். எனவே ஹியூண்டாய் நிறுவனம் தன்னுடைய கையிருப்பு பி எஸ் 4 ரக வாகனங்களுக்கு பயங்கரமாக தள்ளுபடி கொடுக்க இருக்கிறார்களாம்.
எந்த காருக்கு எவ்வளவு
சாண்ட்ரோ பெட்ரோல் - 55,000 ரூபாய்
க்ராண்ட் ஐ 10 பெட்ரோல் & டீசல் - 75,000 ரூபாய்
நியோஸ் டீசல் - 55,000 ரூபாய்
எலைட் ஐ 20 எரா & மேக்னா மாடல்களுக்கு (பெட்ரோல் & டிசல்) 45,000 ரூபாய் என தள்ளுபடிகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.
மற்ற கார்கள்
இது போக ஹியூண்டாயின் Xcent கார்களுக்கு 95,000,
க்ரெட்டா 1.6 எஸ் யூ வி-க்கு 1.15 லட்சம்,
வெர்னா பெட்ரோல் & டீசல் 90,000,
எலண்ட்ரா & டுஸ்கான் பெட்ரோல் & டீசல் கார்களுக்கு அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி கொடுத்து இருக்கிறார்களாம்.
நோ கேஷ் தள்ளுபடி
மேலே சொன்ன தள்ளுபடிகள் நேரடியாக பண ரீதியாக நம் கைக்கு கிடைக்கும் வாய்ப்பு குறைவு தானாம். ஆனால் இந்த சலுகைகளுக்கு மேல் ஷோரூம் டீலர்கள் வேறு தனியாக தள்ளுபடிகளை அள்ளி இரைப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே மக்களே கார் வாங்க நல்ல நேரம் பார்க்கிறீர்கள் என்றால்... இது நல்ல நேரம் போலிருக்கிறதே!