சென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுபடுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தற்காலிகமாக மூடியுள்ளது. மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள் என பலவற்றை தடை செய்துள்ளது.
பெரும்பாலான மாநிலங்களின் எல்லைகள் மூடல், பயணக் கட்டுப்பாடு, அதிலும் ஞாயிற்றுகிழமையன்று நடந்த மக்கள் ஊரடங்கு சீனாவினைக் ஒரு நாள் நம் கண் முன்னே கொண்டு வந்தது என கூறலாம்.
76 நகரங்கள் தனிமைப்படுத்தல்
இந்த நிலையில் குறிப்பாக 76 நகரங்களை முற்றிலும் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன் எதிரொலியான பல மாநிலங்களில் உள்ள தொழில் சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதிலும் ஏற்கனவே படு வீழ்ச்சியை கண்டு வந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே சிலவற்றை மூடி வந்தாலும் தமிழகத்தில் முன்பு அதன் தாக்கம் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை.
ஹூண்டாய் ஆலை மூடல்
மத்திய அரசானது சென்னை, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களை தற்காலிகமாக தனிமைபடுத்த கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலை மூடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மார்ச் 23 முதல் கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
மீண்டும் அறிவிப்பு வரும் வரையில் ஷட் டவுன் தான்
மேலும் உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கப்படும் இந்த தொற்று நோயினை அடுத்து, கூடுதல் அறிவிப்பு வரும் வரை அதன் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆலையை மீண்டும் தொடங்க நாங்கள் மாநில அரசின் அறிவிப்புக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
பல ஆலைகள் மூடல்
இந்த நிலையில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாமும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அறிவிப்புக்கு ஏற்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஆலையை மூட கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாரான மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
அதிகரிக்கும் பாதிப்பு
அதனை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் நிறுவனமும் தனது சென்னை ஆலையை மூடியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மொத்தம் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவினால் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.