அபிநந்தன் வர்த்தமான் என்ற பெயரை அத்தனை எளிதில் நாம் மறந்துவிட முடியாது. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி எதிரியின் குகைக்கே சென்று மீண்டு வந்தவர். இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த விமானப்படை வீரர்.
இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாகவும் இருந்து வீர தீர செயலுக்கான வீர் சக்ரா விருது பெற்றவரான அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமான படையில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவர் தனியார் நிறுவனத்தில் பைலட்டாக வேலைக்கு சேர்ந்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் CRPF வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய் உம்மத் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமான படையின் மிராஜ்-2000 விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அருகில் வந்தன. அவற்றை எதிர்கொள்ள அப்போதைய விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்த்தமான் தனது MiG-21 பைசன் விமானத்தில் களமிறங்கினார்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட F-16 ரக போர் விமானத்தை எதிர்த்துப் போராடி, அதை சுட்டு வீழ்த்தினார். அந்த மோதலின் போது அபிநந்தனின் விமானமும் எதிரியின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்தது. இதனால் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் பாராசூட் மூலம் குதிக்க நேரிட்டது. பின்னர் அங்கு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சுமார் 3 நாட்கள் சிறை வைக்கப்பட்டார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் தான் இந்திய விமானப்படை வீரர் மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என மிடுக்காக அவர் பதில் அளிப்பது வெளியாகி வைரலானது. பின்னர் இந்தியாவின் கடுமையான தூதரக ரீதியான அழுத்தத்தின் காரணமாக மார்ச் 1, 2019 அன்று விடுவிக்கப்பட்டார். நாட்டிற்காக அபிநந்தன் வர்த்தமான் காட்டிய அசாதாரண துணிச்சல் மற்றும் கடமை உணர்வை பாராட்டி, இந்தியாவின் உயரிய விருதான வீர் சக்ரா விருது கடந்த 2021இல் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் குரூப் கேப்டன் பதவி உயர்வு பெற்றார்.
அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று இந்திய விமான படையிலிருந்து பணி ஓய்வு பெற்றார். இவர் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து உரிய தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் FLY91 விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார். FLY91 விமான நிறுவனம் மார்ச் 2024இல் தனது வணிக சேவைகளை தொடங்கியதுடன், தற்போது கோவா மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு 6 ATR 72-600 விமானங்களுடன் இயங்கி வருகிறது.
பொதுவாக இராணுவத்தில் பணியாற்றும் பைலட்டுகள் உடனடியாக தனியார் விமான நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றுவிட முடியாது. தங்களது குறிப்பிட்ட பணிக்காலம் முடிந்ததும் விமானப் படை தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முறையான NOC பெற்று வெளியேற வேண்டும்.
வணிக ரீதியான பயணிகள் விமானங்களை இயக்க தேவையான தகுதிகளை பெறுவதற்கான DGCA தேர்வுகளை எழுத வேண்டும். பின்னர் தான் விமானிக்கான சான்றே கிடைக்கும். சவாலான சூழல்களையும் சமாளிக்கும் திறன், பயிற்சி மற்றும் அனுபவம் காரணமாக விமானப் படை பைலட்டுகளுக்கு வணிக விமான போக்குவரத்து துறையில் எப்போதுமே அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications

