கொரொணா வைரஸ் காரணமாக இந்தியாவில் பணி நீக்கம் என்பது அனைத்து துறைகளிலும் தலை தூக்கி வரும் நிலையில், அது ஐடி துறையில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது எனலாம்.
அதிலும் சர்வதேச அளவிலான பல்வேறு முன்னணி தகவல் தொழில் நுட்ப துறையினை சேர்ந்த நிறுவனங்கள் கூட, லே ஆஃப் என்னும் அஸ்திரத்தினை கையில் எடுத்துள்ளன.
அனுதினமும் உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால், இன்று உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது என்றால் அது மிகையாகாது.
கொரோனாவால் பாதிப்பு
அந்தளவுக்கு கொரொனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது. ஒரு புறம் கொரோனாவினால் நிறுவனங்கள் முன்பு செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. சொல்லப்போனால் முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வருகிறது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேவை குறைவு
அதோடு ஐடி துறைக்கான தேவையிலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அவைகள் நிலை குலைந்து போயுள்ளன என்று தான் கூற வேண்டும். இதன் காரணமாக அங்கு ஐடி துறையின் தேவையும் குறைந்துள்ளது எனலாம்.
செலவினை குறைக்க நடவடிக்கை
மேலும் பல நிறுவனங்கள் சில பல கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியிருந்தாலும், நிறுவனங்கள் செலவினை குறைக்க பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக ஐடி துறைக்காக அவர்கள் செலவிடும் தொகையும் குறைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் ஐடி துறையினரின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
அடி மேல் அடி
இது எல்லாவற்றுக்கு மேலாக புதிய திட்டங்கள் தாமதமாகலாம். ஏற்கனவே உள்ள திட்டங்களும் இன்னும் தாமதமாகலாம். பல புதிய ஒப்பந்தங்கள் ரத்து, இப்படி தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுந்து கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். ஆக இத்துணை பிரச்சனைகளுக்கும் மத்தியில் தான் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் காலம் தள்ளிக் கொண்டு இருக்கின்றன.
தொடரும் பணி நீக்கம்
இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. இதனால் உலகம் முழுக்க உள்ள ஐடி ஊழியர்களுக்கு தான் பாதிப்பு. இதற்கு மத்தியில் ஐடி துறையில் செயல்பாட்டின் அடிப்படையில் பணி நீக்கம் என்பது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் பெஞ்ச் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன.
ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐடி துறையில் உள்ள நிறுவனங்கள், சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. மேலும் இவை ஆட்டோமேஷன் மற்றும் அது தொடர்பான தொழில் நுட்பங்கள் துறையிலும் நுழைய ஆரம்பித்துள்ளன.
ஐபிஎம்மின் அதிரடி நடவடிக்கை
இந்த நிலையில் தான் ஐபிஎம் நிறுவனம் தனது ஊழியர்களில் 2000 பேரை சர்வதேச அளவில் பணி நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்திய ஐடி ஊழியர்கள் சிலர் நூறு பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஐபிஎம்மில் 3,50,000 ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காக்ணிசண்டின் அதிரடி நடவடிக்கை
இதே முன்னணி மற்றொரு ஐடி ஜாம்பவான் ஆன காக்ணிசன்ட் நிறுவனமும் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகின்றனது. முதலாக அதன் பெஞ்ச் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கு மத்தியில் செயல்பாட்டின் அடிப்படையில் தான் பணி நீக்கம் செய்து வருவதாகவும் நிறுவனம் கூறியது.
இதற்கும் ஆலோசனை
இதே போல் அசெஞ்சர் நிறுவனமும் இங்கிலாந்தில் சில பணி நீக்கங்களை செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது. இது ஒரு புறம் இப்படி பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் நீண்டகாலத்திற்கு தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய கூற ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள்
சில நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் நிரந்தரமாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற வைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது சரிபட்டு வருமா? எப்போது தான் இந்த பிரச்சனைகள் முடியும். ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது எப்போது தான் குறையும். இந்த கொரோனா என்னும் அரக்கன் எப்போது நாட்டை விட்டு துரத்தப்படுவான். இது சரியானாலே எல்லாம் விரைவில் சரியாகும்.