2020ல் கொரோனா பீதியின் காரணமாக மக்கள் மத்தியில் ஐஸ்கிரீம் விற்பனை அளவு பெரிய அளவில் குறைந்த காரணத்தால் இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் எதிர்பார்க்காத அளவிற்கு ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளதாக இத்துறை நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பயம்
2020ல் கொரோனா தொற்று குறித்த பயம் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த காரணத்தால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி, இருமல் வரும் என பயத்தில் பெரும்பாலான மக்கள் ஐஸ்கிரீம் வாங்குவதை தவிர்த்தனர். இதனால் 19,000 கோடி மதிப்பிலான ஐஸ்கிரீம் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.
2021ல் ஐஸ்கிரீம் விற்பனை அமோகம்
இந்நிலையில் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில், 2019ஆம் ஆண்டை விடவும் ஐஸ்கிரீம் விற்பனை சுமார் 3,040 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இத்துறையின் முன்னணி நிறுவனங்களான அமுல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், வைதிலால், மதர் டையிரி போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்ககத்தை பெற்றுள்ளது.
4 மாத விற்பனை காலம்
இந்தியாவில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், மார்ச் மாதம் துவங்கி அடுத்த 4 மாதங்கள் இந்தியா ஐஸ்கிரீம் விற்பனை சந்தையில் மிக முக்கிய வர்த்தக காலமாக திகழ்கிறது. ஒரு ஆண்டின் மொத்த விற்பனையில் 60 சதவீதம் இந்த 4 மாதங்களில் மட்டும் விற்பனையாகும் என்பதால் இக்கால விற்பனையை பெறுவதில் போட்டி அதிகமாக இருக்கும்.
மதர் டைரி விற்பனை
இந்நிலையில் ஐஸ்கிரீம் விற்பனையில் முன்னணி நிறுனமாக விளங்கும் மதர் டைரி நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதத்தின் மொத்த விற்பனையும், 2021 மார்ச் மாதத்தின் முதல் 3 நாட்களில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமுல் நிறுவனத்தின் விற்பனை
இதோடு இந்தியாவின் மிகப்பெரிய ஜஸ்கிரீம் விற்பனை நிறுவனமான அமுல் இந்த வருடம் 100% விற்பனை வளர்ச்சியை அடையும் என தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த வருடம் கோடை காலம் வழக்கத்தை விடவும் முன்கூட்டியே வந்த காரணத்தால் விற்பனை சூடுப்பிடித்துள்ளது என அமுல் தெரிவித்துள்ளது.
வைதிலால் இண்டஸ்ட்ரீஸ்
இதேபோல் வைதிலால் இண்டஸ்ட்ரீஸ் 2019ஆம் ஆண்டை விடவும் 2021ல் மார்ச் மாதத்தில் விற்பனையில் சுமார் 3,040 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளையில் விற்பனை சிறப்பாக இருந்தாலும், போக்குவரத்து, பேக்கிங் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் தயாரிப்பு விலை அதிகரித்துள்ளது என இந்நிறுவன ராஜேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.