ஐசிஐசிஐ பேங்க்-ன் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. ஐசிஐசிஐ பேங்கின் வரிக்குப் பிறகான லாபம் (PAT - Profit After Tax) 4,146 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம்.
இது கடந்த காலங்களில் இல்லாத வரலாற்று உச்சம் என, கார்ப்பரேட் டேட்டாபேஸ் நிறுவனமான ஏஸ் ஈக்விட்டி சொல்லி இருக்கிறது.
கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் 1,604 கோடி ரூபாயை லாபமாகக் காட்டி இருந்தது ஐசிஐசிஐ பேங்க். இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 4,146 கோடி ரூபாயை லாபமாகக் காட்டி இருக்கிறது. ஆக 158 % லாபம் வளர்ச்சி. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் வெறும் 665 கோடி ரூபாய் மட்டுமே லாபம் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஐசிஐசிஐ பேங்கின் நிகர வட்டி வருமானம் இந்த காலாண்டில் 24 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த டிசம்பர் 2019-ல் நிகர வட்டி வருமானம் 8,545 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய டிசம்பர் 2018-ல் 6,875 கோடி ரூபாய் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ பேங்க் வரலாற்றிலேயே இதுவரை மூன்று காலாண்டுகளில் மட்டுமே 3,000 கோடி ரூபாய் லாபத்தைத் தொட்டு இருக்கிறதாம். இப்போது முதல் முறையாக 4,000 கோடியைத் தொட்டு இருக்கிறதாம்.
ஐசிஐசிஐ பேங்க்-ன் தோராய வாராக் கடன் (Gross NPA) 5.95 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. இது கடந்த ஜூன் 2016 காலாண்டுக்குக்குப் பின் சொல்லப்படும் குறைவான தோராய வாராக் கடன் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நிகர வாராக் கடனும் ஐசிஐசிஐ பேங்கில் குறைந்து இருக்கிறதாம். கடந்த நான்கு காலாண்டுகளை விடக் குறைவாக, இந்த காலாண்டில் 1.49 சதவிகிதம் நிகர வாராக் கடனாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இதை எல்லாம் விட முக்கியமாக ஐசிஐசிஐ பேங்கின் கடன் அளவு 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி இருக்கிறதாம். கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் கடன் வளர்ச்சி 16 % -மாக அதிகரித்து இருக்கிறது. இந்த டிசம்பர் காலாண்டில் சில்லறை கடன்கள் 19 சதவிகிதமும், கார்ப்பரேட் கடன்கள் 12 சதவிகிதமும் அதிகரித்து இருக்கின்றதாம்.