இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரும், உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஒரு காலத்தில் இடம்பெற்ற சந்தா கோச்சார் தனது கணவருக்கு NUPOWER நிறுவனத்தின் மொத்த உரிமையை வாங்கிக் கொடுப்பதற்காக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் உடன் இணைந்து வங்கிக் கடன் மோசடியைச் செய்துள்ளார்.
இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் சிபிஐ அமைப்பின் பல மாத ஆய்வுக்குப் பின்பு சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் சமீபத்தில் சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் சிபிஐ இந்த விசாரணையின் அடுத்தகட்டமாகத் தனது வலையைப் பெரியதாக வீசியுள்ளது. இதன் மூலம் பல அதிகாரிகள் சிக்குவார்கள் எனக் கணிக்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 10க்கும் அதிகமாகக் கடன்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்க முடிவு செய்துள்ளது. இதில் 4 கடன்கள் சந்தா கோச்சார் தலைமையிலான ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதால் சிபிஐ-க்குச் சந்தேகம் அதிகரித்துள்ளது.
மோசடிகள்
இந்தத் தரவுகள் மூலம் சந்தா கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் இணைந்து எப்போது முதல் இந்தக் கடன் மோசடிகளைச் செய்துள்ளார்கள் எனக் கண்டுபிடிக்க முடியும்.
1875 கோடி ரூபாய்
தற்போது சிபிஐ சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூன் 2009 முதல் அக்டோபர் 2011 வரையிலாகக் காலகட்டத்தில் 1875 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி தரவு
இந்த நிலையில் தான் சிபிஐ, ஐசிஐசிஐ வங்கியிடம் இந்த 6 கடன்களுக்கான தரவுகளைக் கேட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடனிலும் மோசடி செய்யப்பட்டு உள்ளது உறுதியானால் ஐசிஐசிஐ வங்கிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
சிபிஐ குற்றம் சாட்டு
2009-2011 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் வீடியோகான் சிஇஓ வேணுகோபால் தூத்-க்கு ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்தபோது பல முறைகேடுகள், வங்கி விதிகள் மற்றும் சட்டங்களை மீறி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளதாகச் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது மூலம் விசாரணை துவங்கியது.
3250 கோடி ரூபாய் கடன் மோசடி
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்த காலகட்டமான 2010 - 2012ல் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது.
தீபக் கோச்சார்
இந்தக் கடன் பெற்ற பின்பு வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் 50 சதவீத பங்குகளை வைத்திருந்த நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும், மும்பையில் 5.25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதைச் சிபிஐ கண்டுபிடித்தது.