ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நாளை முதல் தமிழகமும் இணைய உள்ளது.
கட்டுக்குகடங்காமல் போயிக் கொண்டிருக்கும் கொரோனாவினை கட்டுப்படுத்த, பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது. எனினும் இன்றளவிலும் இந்தியாவில் பலி எண்ணிக்கையானது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் உதவியை செய்து வருகின்றன. பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி கேம்ப், மருத்துவ உதவி, இன்சூரன்ஸ், சம்பளத்துடன் விடுப்பு என பலவற்றையும் அளித்து வருகின்றன.
அட்வான்ஸாக இரு மாத சம்பளம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தனியார் வங்கி குழுமத்தினை சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் கொரோனாவின் இரண்டாம் கட்ட தாக்கமானது மிக மோசமாக பரவி வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அதன் ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தினை முன் கூட்டியே வழங்குவதாக அறிவித்துள்ளது.
வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு சலுகை
இவ்வாறு முன் கூட்டியே பெறப்படும் சம்பளத்தினை, ஊழியர்கள் பணிக்கு திரும்பிய பின்னர், 6 மாதம் அல்லது 12 மாத தவணைகளாக திரும்ப செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்ற மருத்துவ செலவினங்களுக்காக 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடி
கொரோனா பரவல் என்பது மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் மத்தியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை குறைக்க ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட், அதன் ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது. உண்மையில் நெருக்கடியான நேரத்தில் இது போன்ற சலுகைகள் ஊழியர்களுக்கு பெரும் அளவில் கைகொடுக்கும்.
ஊழியர்களுக்கு தடுப்பூசி
முன்னதாக இந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலவை ஏற்பதாக அறிவித்தது. இந்த திட்டத்திற்காக பல சுகாதார நிறுவனங்களுடன் இணைந்திருப்பதாகவும் அறிவித்தது. இது தவிர ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இத்தகைய நெருக்கடியான காலகட்டங்களில் பேம்லி ப்ளோட்டர் பாலிசி மூலம் 4 லட்சம் வரையில் க்ளைம் செய்து கொள்ளலாம் எனவும் கார்ப்பரேட் பஃபர் மூலம் 3 லட்சம் ரூபாய் வரையிலும் கவர் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.